ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு... பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சிவகாசி : ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி அளித்துள்ள பேட்டியில், " பட்டாசு உற்பத்திக்கு ஜிஎஸ்டியில் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, இதனை 15 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 30 முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்க உள்ளோம். இந்தப் போராட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 811 பட்டாசு உற்பத்தி ஆலைகள் பங்கேற்கின்றன" என தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, சீன பட்டாசுகள் அதிக அளவில் இறக்குமதி செய்து வருவதால் தமிழக பட்டாசு நிறுவனங்கள் பெருமளவிலான பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளன.
இந்த நிலையில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் பட்டாசு உற்பத்தியாளர்கள்.