வதந்திகளை நம்பாதீங்க.. மீன்களை சாப்பிடுங்க.. சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்
கடலில் எண்ணெய் கொட்டி பரவி வருவதால் மீன்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திருவொற்றியூர்: சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதியதில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த எண்ணெய் எண்ணூர் பாரதியார் நகரில் 200 மீட்டர் தூரத்திற்கு தேங்கி நிற்கிறது. தொடர்ந்து திருவான்மியூர் வரை எண்ணெய் பரவி வருகிறது.
இந்த இடத்தை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பென்ஜமின், மீன்வளத்துறை ஆணையர் பீலாராஜேஷ், சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கடலில் பிடிக்கும் மீன்களை பொதுமக்கள் வாங்க விரும்பாத நிலையில், அதுபற்றிய அச்சத்தைப் போக்கும் வகையில் மீன் உணவுகளை பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உண்டனர்.
பின்னர், அமைச்சர் ஜெயக்குமார், கடலில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணியில் 1,100 பேர் ஈடுபட்டு உள்ளனர் என்றும் 45 டன் எண்ணெய் அகற்றப்பட்டு உள்ள நிலையில், இன்னும் 20 டன் எண்ணெய் கடலில் உள்ளது என்றும் கூறினார். மேலும் கடலில் ஒரே இடத்தில் 85 சதவீதம் வரையிலான எண்ணெய் ஒதுங்கி இருப்பதால் அதனை எளிதில் இன்னும் 2 நாட்களில் அகற்றி விடலாம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மீதி உள்ள 15 சதவீத எண்ணெய் மற்ற இடங்களில் ஒதுங்கி உள்ளதாகக் கூறிய ஜெயக்குமார், இந்தப் பிரச்சனையால் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை உள்ள மீன்களை ஆய்வு செய்ததில் மீன்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், வதந்திகளை நம்பாமல் பயமின்றி மீன்களை வாங்கி சாப்பிடலாம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications