இலங்கை கைது செய்த 66 மீனவர், 81 படகுகளை மீட்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 66 தமிழக மீனவர்களையும், 81 படகுகளையும் மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடித விவரம்:
நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 9-ந் தேதி இரண்டு மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
அதுமட்டுமல்லாமல், புதுச்சேரி காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மீன்பிடி படகுகளுடன் இலங்கை கங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபை தீர்மானம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 38 மீனவர்களையும், அங்குள்ள 79 படகுகளையும் உடனே விடுவிப்பதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடந்த 5-ந் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய உடனேயே இந்த கைது சம்பவம் நடந்திருப்பது துரதிருஷ்டவசமானது.

சேதமாகும் படகுகள்
மீன்பிடி படகுகளை விடுவிக்காமல் இருப்பதற்காக இலங்கை அரசு எடுத்துள்ள நிலைப்பாடு, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. இலங்கை அரசின் வசமுள்ள அந்த படகுகள் கடந்த 6 மாதங்களாக பயன்படுத்தப்படாமலும், பராமரிக்கப்படாமலும் இருப்பதால் அவை சேதமடைந்து இழப்பை ஏற்படுத்திவிடும்.

ஜெ. கடிதங்கள்
நேர்மையற்றதும், தீமையை ஏற்படுத்துவதுமான நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுத்திருப்பதையும், அவர்களின் படகுகளை தொடர்ந்து பிடித்து வைத்துக்கொண்டு, அவற்றை விடாமல் வைத்துக்கொண்டு மீனவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துதையும் சுட்டிக்காட்டி ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலர் கடிதம்
இதனால் பாக் நீரிணை பாரம்பரிய பகுதியில் அமைதியாக மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் எழுதிய 6.12.14 தேதியிட்ட பதில் கடிதத்தில், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினால், தமிழக அரசின் வசமுள்ள இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீது சந்தேகம்
ஆனால் தற்போது நடந்துள்ள கைது சம்பவம், தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிப்பதில், இலங்கை அரசுக்கு இருக்கும் உண்மையான நோக்கத்தைப் பற்றிய சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்துகிறது.

கச்சத்தீவு மீட்பு
பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் மீனவர்களின் உரிமையை மீட்டெடுப்பதிலும், மிகப் பழைய காலத்தில் இருந்தே இந்தியாவின் ஒரு பங்காக இருந்த கச்சத்தீவை மீட்பதிலும் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்பதை மீண்டும், மீண்டும் கூறிக்கொண்டிருக்கிறோம்.

முடிந்து போன விஷயம் அல்ல..
1974-ம் ஆண்டு மற்றும் 1976-ம் ஆண்டுகளில் கச்சத்தீவு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தமிழக அரசும், ஜெயலலிதாவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டிருப்பதால், இந்தியா-இலங்கைக்கு இடையிலான சர்வதேச கடல்சார் எல்லையை (ஐ.எம்.பி.எல்.) ஒரு முடிந்து போன விஷயமாக இந்திய அரசு கருதிவிடக் கூடாது.

சிறப்பு நிதி
கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி உங்களை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில், மீனவர்களின் மாற்று மீன்பிடி தொழிலுக்கு ஏற்றவாறு, ஆயிரத்து 520 கோடி ரூபாயும், ஆண்டு பராமரிப்பிற்கு 10 கோடி ரூபாயும் ஒதுக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளதை நினைவு கூறவிரும்புகிறேன்.

66 மீனவர்கள், 81 படகுகள்
இந்த தொகையை மத்திய அரசு விரைவாக கொடுத்து உதவினால், நீண்டகால மீனவர் பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். எனவே கச்சத்தீவை மீட்பு, நிதி ஒப்பளிப்பு போன்ற நீண்டகால தீர்வுக்கான விவகாரங்களில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 28 மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 66 மீனவர்களையும், 81 படகுகளையும் இலங்கை அரசிடம் இருந்து மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications