இலங்கை சிறையில் உள்ள 93 மீனவர்களையும், 62 படகுகளையும் விடுவிக்கக் கோரி மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்து வருகிறது. மத்தியில் பாஜக அரசு அமைந்ததைத் தொடர்ந்து மீனவர்கள் கைதுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனபோதும், மீனவர்கள் கைது நடவடிக்கை தொடரத் தான் செய்கிறது. இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவது தனக்கு மிகுந்த வேதனையை தருவதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
கைது...
இன்று நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை ராணுவம் 50 மீனவர்களை கைது செய்ததுடன், 5 இயந்திரப் படகுகளையும், 2 நாட்டுப் படகையும் பறிமுதல் சென்றுள்ளனர். இலங்கை ராணுவத்தினர் அவர்களை காங்கேசன் துறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
முந்தைய கடிதங்கள்...
ஏற்கனவே 22,7,2014 அன்று 43 மீனவர்களையும், 9 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதை தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
படகுகள் விடுவிக்கப்படவில்லை...
முன்னதாக தங்களது அரசாங்கம் எடுத்த துரித முயற்சியால் சீரான இடைவெளியில் 225 மீனவர்கள் படிப்படியாக இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டனர். ஆனால் மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 55 படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
நடவடிக்கை...
மேலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை சிறையில் உள்ள 93 மீனவர்களையும், 62 படகுகளையும் விடுவிக்கவேண்டும் என இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.