தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு... சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்
திருச்சி: தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளர்.
திருச்சியில் பாஜகவுடன் மக்கள் தமிழகம் இணைப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கை சிறையில் சிக்கத் தவிக்கும் மீனவர்களும், அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும். மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 31-ம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். இந்த விஷயத்தில் தமிழக அரசின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாகத் தேவை.
உச்சநீதிமன்ற உத்தவவின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைக் கண்டிப்பாகத் தர வேண்டும். நமது உரிமையை கர்நாடகாவிடம் கேட்டுப் பெறுவதில் மத்திய அரசு ஒருபோதும் பின் வாங்காது. காவிரி நீரை தமிழகத்திற்குப் பெற்றுத் தருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
தமிழகத்தில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் சென்று கலப்பதைத் தடுக்க, தமிழக அரசு உடனடியாக தடுப்பணைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீர் ஆதாரத்தை சுரண்டும் விதமாக மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளையை முற்றிலும் தடுக்க வேண்டும்.
குளைச்சல் துறைமுகம் கட்டுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு முதற்கட்டமாக ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்து அறிக்கை சமர்பிக்க பட்ட உடன் அது மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.
தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தின் கீழ், காவிரி உள்ளிட்ட 101 நீர் வழி போக்குவரத்திற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 123 கோடி ரூபாய் மதிப்பிலான பக்கிங்காம் கால்வாய் நீர்வழி போக்குவரத்து திட்டம், ஆந்திர மாநிலம், காக்கிநாடா முதல் பாண்டிச்சேரி வரையிலான 600 கி.மீ. தூரத்துக்கு மேற்கொள்ளப்படும். இந்த தேசிய நீர்வழிச்சாலை திட்டத்துக்கு ஆந்திர அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால், இந்த திட்டம் சிறப்பாக முடிந்துள்ளது.
வெகு விரைவில், ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நி்ச்சயமாக நடக்கும் என்றார்.
நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அனைத்து மாநிலஅரசுகளின் ஒத்துழைப்பு தேவை என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு நதிகள் இணைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், நாட்டின் கடற்கரை ஓரம் உள்ள 7 ஆயிரம் கி.மீ. நீளம் கொண்ட அனைத்து சாலைகளும், தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படும். அப்போது கிழக்கு கடற்கரை சாலையும் தரம் உயர்த்தப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications