மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க வங்க கடலில் மீன்பிடித் தடைக்காலம் 15-ம் தேதி தொடக்கம்
மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க வங்கக் கடலில் ஆழ்கடல் மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
குமரி: வங்கக் கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடைவிதிக்கும் காலம் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 45 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த நாட்களில் ஆழ்கடலில் மீன்கள் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும்.

அதன்பின்பு கடலில் மீன்கள் அதிக அளவில் உற்பத்தியாகும். இந்த காலக்கட்டத்தில் விசை படகுகள் கடலுக்கு சென்றால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். இந்த நாட்களில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு எந்த விசைபடகுகளும் கடலுக்கு செல்லக்கூடாது என்ற விதிமுறை உண்டு. இதனை மீன் வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
அதன்படி வங்க கடலில் கன்னியாகுமரி முதல் சென்னையை அடுத்த திருவள்ளூர் வரையிலான கடல் பகுதியில் வருகிற 15-ஆம் தேதி முதல் மீன் பிடி தடை காலம் தொடங்குகிறது. மே மாதம் 30-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும். அது வரை எந்த விசைபடகுகளும் கடலுக்கு செல்லாது.
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம், தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம், ராமேசுவரம், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விசை படகுகள் எதுவும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாது. இந்த காலக்கட்டத்தில் இப்பகுதி விசை படகு உரிமையாளர்கள் தங்களின் விசை படகுகளை கரைக்கு கொண்டு வந்து பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தங்கள் மீன் பிடி உபகரணங்களையும் சீரமைப்பார்கள்.
அதே நேரம் கடலுக்கு செல்ல கட்டுமரங்களுக்கு தடை இல்லை. இதில் மீன் பிடிக்க செல்பவர்கள் கரையோரத்தில் மீன் பிடித்து திரும்பி விடுவார்கள். இதனால் உள்நாட்டில் மீன்களுக்கு கடும் கிராக்கி நிலவும்.












Click it and Unblock the Notifications