மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது... மீன் குழம்புக்கு ஆபத்து... வறுவலுக்கு ஆப்பு!
சென்னை: மீன்களின் இனப்பெருக்கக் காலத்தையொட்டி, அரசு அறிவித்த 45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலமாக அரசு உத்தரவின் பேரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கணக்கில் கொண்டும், கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்த மீன்பிடித் தடைக்காலத்தை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தாண்டிற்கான மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஓய்வெடுக்கும் விசைப்படகுகள்...
இதனால், முன்கூட்டியே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். கடற்கரைகளில் விசைப்படகுகள் ஓய்வெடுப்பதைக் காணமுடிகிறது. இனிவரும் நாள்களில் விசைப் படகுகளில் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளும், வண்ணம் பூசும் பணிகளும் தொடங்கப்படும்.

கரையோர மீன்பிடித் தொழில்...
கட்டுமரம் மற்றும் மாருதி படகுகள் மூலமாக கரையோர மீன்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் மீன்கள் மட்டுமே இனி சந்தையில் விற்பனைக்கு வரும். இதனால், ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலத்தில் மீன்வரத்து குறையும் என்பதால், மீன் விலை உயர்வது தவிர்க்க இயலாதது.

வெயில் கொடுமையால்...
கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் சற்று முன்னதாகவே ஆரம்பித்து விட்டதால், உடல் சூட்டை அதிகரிக்கும் கோழிக்கறி பக்கம் செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். ஆட்டுக்கறி விலையும் அதிகமாக இருப்பதால் பெரும்பாலானவர்களின் தேர்வு கடல் உணவாகவே இருந்தது.

மக்கள் சோகம்...
இந்த சூழ்நிலையில், தற்போது மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ளதால், இனி வரும் நாட்களில் மீன் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீன்பிரியர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் சோகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications