மீன் பிடித் தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவு... மீன்கள் விலை குறைய வாய்ப்பு
தமிழகத்தில் அமலில் இருந்து வந்த மீன்பிடித்தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் கடலுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி மீன்பிடிக்க தடை அமலுக்கு வந்தது. இந்த சமயத்தில் மீன்களின் இனப்பெருக்கம் காலம் என்பதால் ஆண்டுதோறும் 45நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் 45 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். மீன்கள் கிடைக்காமல் சந்தையில் மீன்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
கடந்த சில நாட்களாக, விசைப்படகுகளுக்கு தமிழக அரசின் உத்தரவுப்படி இளம்பச்சை நிற வர்ணம் பூசும் பணியும், வலைகளை பழுதுபார்க்கும் பணியும் நடைபெற்றன. அதேபோன்று மீன்களைப் பதப்படுத்த ஐஸ் கட்டிகள், குடிநீர், டீசல் ஆகியவை படகுகளில் சேகரிக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் மீன்பிடித்தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதால், கடலுக்குச் செல்ல மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர். அடுத்த சில நாட்களில் மீண்டும் மீன்கள் தாராளமாக கிடைக்கும் என்றும் இதனால் மீன்கள் விலை கணிசமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications