சாத்தூரில் ஓடும் அரசுப் பேருந்தில் இளைஞரை சுட்டுக் கொன்றவரை பிடிக்க 5 தனிப்படை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஓடும் அரசுப்பேருந்தில் துப்பாக்கியால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடிய இருவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகர்கோவிலில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று மதுரைக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் அந்த பேருந்தில் ஏறினார். அவர் பின்னால் அமர்ந்திருந்தார். அதே பேருந்தில் அவருடைய நண்பர்கள் 2 பேர் உடன் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவர்களுக்கும் கருப்பசாமிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கருப்பசாமியை சுட்டதாக தெரிகிறது. இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு பேருந்தை சாலையோரத்தில் ஓட்டுநர் நிறுத்தியபோது, கருப்பசாமியை சுட்டுக் கொன்ற இருவரும் தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தடயவியல் நிபுணர்கள் மேற்பார்வையில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். கருப்பசாமியின் உடல் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கருப்பசாமியின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 டிஎஸ்பிக்கள், 5 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 5 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி.ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார்.