ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஆசிரியை திட்டியதால் அரளிவிதை சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை
ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த 5 மாணவிகள் அரளிவிதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி ஆசிரியை கண்டித்ததால் 5 மாணவிகள் அரளி விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தற்போது இப்பள்ளியில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. சத்தியபிரியா, அபிநயா, வைகுண்ட வாசுகி, முத்துக்கலா, கண்ணகி. ஆகிய 5 மாணவிகளும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நேற்று தேர்வோ சிறப்பு வகுப்போ எதுவும் நடைபெறவில்லை. ஆனால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் மாணவிகள் 5 பேரும் பள்ளிக்கு வந்துள்ளனர்.
இதனைப்பார்த்த ஆங்கில ஆசிரியை ஆனந்தி ஜெபா கிறிஸ்டின் என்பவர், தேர்வு இல்லாத நேரத்தில் ஏன் பள்ளிக்கு அவசியமே இல்லாமல் வந்திருக்கிறீர்கள் என கண்டித்துள்ளார். இதில் மாணவிகள் மிகுந்த மனவேதனையடைந்ததாக கூறப்படுகிறது. எனவே அருகில் உள்ள கண்மாய் கரையில் சென்று அங்கிருந்த அரளி விதைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதனை கேள்விப்பட்ட ஆசிரியர்கள் பதறியடித்து கண்மாய் பகுதி சென்று மாணவிகளுக்கு முதலுதவி செய்தனர். பின்னர், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் மாணவிகளை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications