பிளாஷ் பேக் 2016: சாதி ஆணவக் கொலைகளும்... கண்ணீர் கதைகளும்...
2016ம் ஆண்டின் தொடக்கத்தில் தொடக்கத்தில் நடந்த உடுமலை சங்கர் படுகொலை தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியது. ஜாதி ஆணவப் படுகொலைகள், கொலை மிரட்டல்கள் 2016ம் ஆண்டு அதிகம் அரங்கேறியது.
சென்னை : தருமபுரி இளவரசன், சேலம் ஓமலூர் கோகுல்ராஜ் வரிசையில் ஜாதி ஆணவப் படுகொலைக்கு ஆளான உடுமலைப் பேட்டை சங்கர் இப்போது பலராலும் மறக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த கொலை ஆதை தொடர்ந்து அவரது மனைவி கவுசல்யாவின் தற்கொலை முயற்சி என தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் மட்டும் வருடத்துக்கு 1000 பேர் சாதி ஆணவத்திற்கு பலியாவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. உலகில் ஐந்து சாதி ஆணவக் கொலைகள் நடந்தால் அதில் ஒன்று இந்தியாவில் நடக்கிறது.
ஆணவக் கொலைக்கு முக்கிய காரணம் உயர்சாதி என்று வகைப்படுத்தப்படும் அந்தக் குடும்பம் அடையும் அவமானங்களும் புறக்கணிப்புகளும்தான். தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 6,500 பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதில் 50 சதவிகிதம் காதலுக்காக நடக்கும் தற்கொலைகள்தான்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சாதி மாறி திருமணம் செய்ததற்காக 81 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 105 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சொல்லும் புள்ளிவிவரம், அதிர்ச்சியளிக்கிறது. காதலிக்கும் ஆண்கள் மட்டும் கவுரவக் கொலை செய்யப்படுவதில்லை. பெண்களும் கவுரவக் கொலைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
மார்ச் 2016
சங்கரும் கவுசல்யாவும் இன்று (13 மார்ச் 2016) மதியம் 2.00 மணிக்கு சென்று இருக்கின்றனர். அங்கு 5 பேர் கொண்ட கும்பலால சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். கவுசல்யாவிற்கும் கடுமையான வெட்டு காயங்கள் ஏற்பட்டது. கவுசல்யா சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். ஆனால் அவரது மனதில் ஏற்பட்ட காயம் இன்னமும் குணமடையவில்லை. சங்கரை கொன்றால், கவுசல்யா தங்களுடன் வந்துதானே ஆக வேண்டும் என்கிற சாதிய வன்மத்துடன் இந்த கொலையை கவுசல்யா குடும்பத்தினர் செய்து உள்ளனர்.
ஜூன் 2016
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் லாரி அதிபர் பழனிவேல் மகன் சந்தோஷ், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் தேசிகன் என்பவரின் மகள் சுமதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத்துக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுமதியை அவருடைய பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். 2012ஆம் ஆண்டு பெண் வீட்டின் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மருமகள் கொலை
சந்தோஷ் ஓசூர் வங்கி கிளை மேலாளராக பதவி உயர்வு பெற்றார். சந்தோசின் பெற்றோர் அவருடைய காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டு ஜூன் மாதம் திருச்செங்கோட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதாக கூறினர். சந்தோஷ் திருச்செங்கோடு சென்றிருந்த போது சுமதி படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில் தனது மகன் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் சுமதியை கொலை செய்ததாக சந்தோஷின் பெற்றோர் கூறியது அதிர்வலைகளை உருவாக்கியது.
செப்டம்பர்
சென்னை காட்டுப்பாக்கம் அம்மன் நகர் 5வது தெருவை சேர்ந்த 19 வயது பெண் தனது காதல் கணவருடன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட தங்களை கவுரவ கொலை செய்ய எனது பெற்றோர் அடியாட்களுடன் ஊர், ஊராக தேடி வருகிறார்கள் என்று புகார் அளித்தார்.
அக்டோபர் 2016
திண்டுக்கல் நத்தம் அய்யனார்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெபசீலன் இவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சுண்ட மேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஜெனிபா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். மாஜிஸ்திரேட்டிடம், பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்றும் கணவருடன் தான் செல்வேன் என்றும் ஜெனிபா தெரிவித்தார். ஜெனிபாவின் பெரியப்பா மகன் , காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெபசீலனை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்தார்.
டிசம்பர்
நாமக்கல் அருகேயுள்ள வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ், இவரின் இரண்டாவது மகளான 16 வயதே ஆன ஐஸ்வர்யா என்பவருக்கும், சேந்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முயற்சி செய்து வந்துள்ளனர். இந்த திருமணத்திற்கு ஐஸ்வர்யா எதிர்ப்பு தெரிவிக்கவே, ஐஸ்வர்யாவை கொலை செய்து எரித்து விட்டனர். இப்போது பெற்றோர்கள் சிறையில் காலம் தள்ளுகின்றனர்.