வெள்ள நிவாரணம் கோரி தூத்துக்குடியில் அமைச்சர் சண்முகநாதனை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி அமைச்சர் சண்முகநாதனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் தூத்துக்குடி- நெல்லை சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் பெய்த கன மழையால் சோரீஸ்புரம், மாதவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் 1000க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தன.

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு உரிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு வந்த அமைச்சர் சண்முகநாதனை அவர்கள் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுடன் அமைச்சர் சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் இந்த சமாதானத்தை பொதுமக்கள் ஏற்க மறுத்து தொடர்ந்தும் மறியல்- முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். இதனால் தூத்துக்குடி- நெல்லை சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஒருவழியாக "இடிந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தருவோம்" என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் அளித்த உறுதியை ஏற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதன் பின்னர் போக்குவரத்து சீரானது.












Click it and Unblock the Notifications