வெள்ளம் வருவது இயற்கை, அதிகமாக மழை பெய்தால் வரும்.. முன்னெச்சரிக்கை பற்றிய கேள்விக்கு முதல்வர் பதில்
Recommended Video

மதுரை: வெள்ளம் வருவது இயற்கை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி, இடைத்தேர்தல் தொடர்பாக, மதுரையில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் பேட்டியளித்தபோது, நிருபர்கள் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

இயற்கை
பருவமழை முன்னெச்சரிக்கையை பொறுத்த அளவில், மூன்று முறை அரசு உயர் அதிகாரிகளை அழைத்து, தலைமைச் செயலகத்தில் அவர்கள் ஆலோசனைகளைப் பெற்று தக்க ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. வெள்ளம் வருவது என்பது இயற்கை. மழை அதிகமாக பெய்தால் வெள்ளம் வரும். இப்போது கூட இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இயற்கை யாரிடமும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. ஆனால் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையை அரசு எதிர்கொள்ள திட்டமிட்டு செயல்படுத்தி கொண்டுள்ளது என்றார்.
[திருப்பரங்குன்றத்தில் எதிரிகளோடு, துரோகிகளையும் வீழ்த்தி 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி: ஓபிஎஸ்]

தனியாக உள்ளோம்
இடைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த நிருபரின் கேள்விக்கு, தேர்தல் அறிவிக்காமல் எப்படி கூட்டணி பற்றி பேசுவது? இப்போதுள்ள நிலையில் நாங்கள் தனியாக தான் உள்ளோம். யாருடனும் கூட்டணி இல்லை என்றார்.

திருப்பரங்குன்றம் மக்கள் விவேகமானவர்கள்
தினகரன் கட்சியின் போட்டி பற்றி நிருபர்கள் கேட்டபோது, "ஆர்கே நகர் தேர்தலில் மக்களை ஏமாற்றி எப்படி வெற்றி பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் விவேகமானவர்கள். நன்கு சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அறிந்து வாக்களிப்பார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டே அதிமுக மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள்" என்றார்.

தொட்டது துலங்கும்
ஏன் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பணியை துவக்கியுள்ளீர்கள் என்ற நிருபர்கள் கேள்விக்கு, மதுரை மாவட்டம் ஒரு ராசியான மாவட்டம். தொட்டது துலங்கும். இங்கே எது ஆரம்பித்தாலும், அது வெற்றியோடு முடியும். எனவே மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் கழகப் பணியை நாங்கள் துவக்கி உள்ளோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

மதுரையில் எய்ம்ஸ்
எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்த அளவில், ஜெயலலிதா இருந்த போதே மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று அறிவிக்கப்பட்டது. விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவேன். மதுரையில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை வரும். எந்த சந்தேகமும் தேவையில்லை என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications