நேபாளத்தில் கடும் பனிச்சரிவு.. சுற்றுலா சென்ற 7 தமிழர்கள் முக்திநாத் மலையில் சிக்கித் தவிப்பு
சென்னை: நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேற முடியாமல் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 7 பேர் சிக்கித் தவிக்கின்றனர்.
நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் செப்டம்பர் வரை பருவமழை சீசன். இந்த பருவமழை காலத்தில் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதும் வாடிக்கையான ஒன்றாக நடைபெற்று வருகிறது.

கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிய 54 பேர் பலியானதாகவும் பலரை காணவில்லை எனவும் நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு, பனிச்சரிவு ஏற்பட்டதால் 3 பெண்கள் உள்பட 7 பேர் மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர்.
கடுமையான பனிச்சரிவு காரணமாக மலையில் இருந்து கீழே இறங்குவதற்கான பாதை இல்லாததால் அவர்கள் கடந்த நான்கு நாட்களாக மலையிலேயே உள்ளதாகவும், அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய தூதரகம் மூலம் நேபாள நாட்டு தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications