எதிர்கட்சியினர் வாகனத்தை சோதனை போட்டதில் தவறில்லை - வைகோ
சட்டசபைக்கு வந்த எதிர்கட்சியினர் வாகனத்தை சோதனை செய்ததில் தவறேதும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை : நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாளில் சட்டசபைக்கு வந்த எதிர்கட்சியினரின் வாகனத்தை சோதனை செய்ததில் தவறேதும் கிடையாது என்று கூறியுள்ள வைகோ, மோதல் ஏற்படுத்தும் நோக்கத்தில் எதிர்கட்சியின் அவைக்கு வந்தார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சட்டசபையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த சம்பவங்கள் பற்றி கூறினார்.

தற்கொலை மிரட்டல்
இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டசபையிலும் இதுவரை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புகளில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது கிடையாது என்று வைகோ கூறினார். சட்டசபையில் இருந்து எங்களை வெளியேற்றினால் தற்கொலை செய்து கொள்வோம் என்று ஸ்டாலின் மிரட்டியதாக நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் மிரட்டல்
கையில் பிளேடு வைத்திருக்கிறோம் என்றும் எங்களை வெளியேற்றினால் கைகளை அறுத்துக்கொள்வோம் என்று துரைமுருகன் மிரட்டியதாகவும் நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் வைகோ கூறினார்.

மோதல் ஏற்படுத்த வந்தார்களா?
சட்டசபைக்கு வந்த போது எதிர்கட்சியினரின் வாகனங்களை காவலர்கள் சோதனை செய்தனர். இது தவறேதும் இல்லை என்று கூறிய வைகோ, மோதல் ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்கள் சட்டசபைக்குள் வந்தார்களா என்றும் வைகோ கேள்வி எழுப்பினார்.

வெளியேற்றியது ஏன்?
சட்டசபையில் அமளியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றச் சொன்னார் சபாநாயகர். இவர்கள் வெளியேறாமல் இருந்ததால் அவைக்காவலர்களை வைத்து வெளியேற்றச் சொன்னார் சபாநாயகர் தனபால். நாடாளுமன்றத்தில் தானும் ஒருமுறை வெளியேற்றப்பட்டிருக்கிறேன் என்றும் வைகோ கூறினார்.

ஜானகி ராமச்சந்திரன்
தொடர்ந்து பேசிய வைகோ, 1988ஆம் ஆண்டு ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக இருந்த போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் கலவரங்கள் வெடித்தன. கலவரம் செய்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவையில் இருந்த உறுப்பினர்களை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி ராமச்சந்திரன் வெற்றி பெற்றதாக அப்போதய சபாநாயகர் பி.எச். பாண்டியன் அறிவித்தார். ஆனால் சில தினங்களில் ஆளுநர் குரானா, தமிழக அரசை டிஸ்மிஸ் செய்தார் என்றும் வைகோ இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications