ரஷ்யா விமானம் வெடித்து சிதறி விபத்து- 2 இந்தியர்கள் உட்பட 62 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் தரையிறங்கும் போது, விமானம் வெடித்துச் சிதறிய விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 62 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
துபாயில் இருந்து ரஷ்யா சென்ற ஃபிளை துபாய் என்ற போயிங் 738 ரக விமானம், ரஷ்யாவின் ரோஸ்டாவ் ஆன் டான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது.
ஃ பிளை துபாய் எப் இசட் 981 என்ற போயிங் விமானம் துபாயில் இருந்து வந்தது. தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டாவ் ஆன் டான் விமான நிலையத்தில் அதிகாலை 3.50 மணிக்கு தரையிறங்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பனி மூட்டம் காரணமாக விமானம் ஒடுபாதையில் சரியாக இறங்க முடியாமல் மோதி விபத்தில் சிக்கியது. விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த அனைவரும் உடல் கருகி பலியாகினர்.
மோசமான வானிலை மற்றும் உரிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் விமானம் விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் 55 பயணிகள் இருந்ததாகவும், விமான ஊழியர்கள் 7 பேர் இருந்ததாகவும் அனைவரும் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய விமான துறை செய்தி தொடர்பாளர் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்களில் 33 பேர் பெண்கள், 18 ஆண்கள், 4 குழந்தைகள் என்றும் அவர் தெரிவித்தார்.
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய அதிகாரி , "ஃபிளைதுபாய் விமான நிறுவனத்தில் எஃப் இசட் 981 என் கொடண்ட போயிங் 737-800 ஜெட் ரக பயணிகள் விமானம் 55 பயணிகளுடன் துபாய் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக ஓடுதளத்தை சரியாக காணமுடியததால் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் விமானத்திலிருந்த அனைவரும் பலியாகினர்" என்றார்.
இந்த விமான விபத்தை ஃபிளை துபாய் விமான நிறுவனமும் உறுதி செய்துள்ளது. விமான விபத்திற்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான நிலைய ஆணையரகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் தீ அணைக்கப்பட்டுவிட்டது. எனினும் மோசமான இந்த விபத்துக்குப் பின்னர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்
Nationalities of victims from the passengers of Fly Dubai plane in Russia include:
— Dubai Media Office (@DXBMediaOffice) March 19, 2016
44 Russians
8 from Ukraine
2 from India
1 from Uzbekistan
இதனிடையே மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை மற்றும் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை துபாய் ஊடக அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்படி இந்த விபத்தில் 44 பேர் ரஷ்யர்கள், உக்ரைன் நாட்டினர் 8 பேர், இந்தியர்கள் 2 பேர், உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து விட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.
மோசமான வானிலையும், விமானி எடுத்த தவறான முடிவுமே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை
இதனிடையே ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்ட பட்டியலில், அஞ்சு கதிர்வேல் ஐயப்பன் மற்றும் மோகன் ஷ்யாம் என்ற இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.