போகி புகை, பனிமூட்டம்: சென்னையில் விமான சேவையில் பாதிப்பு
சென்னை: அடர் பனிமூட்டம் காரணமாகவும், போகியால் எழுந்த புகை காரணமாகவும் சென்னையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறைந்த அளவே வெளிச்சம் உள்ளதால் ஏராளமான விமானங்கள் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன. விமானங்கள் தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் பல பகுதிகளுக்குப் புறப்பட்டுச் செல்லும் விமானங்கள் தாமதாகவே புறப்பட்டுச் செல்கின்றன.
குறைந்த அளவே வெளிச்சம் இருப்பதால், பெங்களூர், ஐதராபாத், மும்பை மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் ஆகிய நகரங்களில் இருந்து சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் 10 நிமிடத்துக்கும் மேலாக வானில் வட்டமடித்த பின்னரே தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.
போகி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் போகிப் பண்டிகையையொட்டி பழைய பொருட்கள் மற்றும் துணிகளை பொதுமக்கள் நேற்றிரவு முதலே தீ வைத்து கொளுத்தினார்கள். இதனால் சென்னை முழுவதும் இன்று அதிகாலையில் காலையில் புகை மூட்டமாக காணப்பட்டது. போகிப்பண்டிகையால் பரவிய புகை மூட்டம் அதோடு பனிமூட்டமும் சேர்ந்து கொண்டதால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் வெளிச்சம் குறைவாக தெரியவை விமானங்கள் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
விமானங்கள் தரையிறங்க 500 மீ. அளவுக்கு வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய அளவுக்கு வெளிச்சம் தேவைப்படும் நிலையில், பார்வை எட்டும் தூரம் 200 முதல் 250 மீ. அளவுக்கு மட்டுமே இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.