விஜயகாந்த் உடன் பாடகர் கோவன் சந்திப்பு- மது விலக்குக்கு எதிரான போராட்டத்தில் இணைய அழைப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் கோவன் வெள்ளிக்கிழமையன்று சந்தித்து பேசினார். சென்னையில் அடுத்தமாதம் நடத்தும் மதுவிலக்கு பிரச்சார விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று விஜயகாந்திடம் கோவன் அழைப்பு விடுத்தார். தான் கைது செய்யப்பட்ட போது தனக்கு ஆதரவு தெரிவித்த விஜயகாந்திற்கு நன்றி தெரிவிக்கவே சந்தித்ததாக கோவன் கூறியுள்ளார்.
மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவன், மதுவிலக்கை ஆதரித்து பாடல்கள் எழுதி சமூக வலை தளங்களில் வெளியிட்டு பிரசாரம் செய்தார். மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை எழுதி பாடியதற்காக அவர் தேச துரோக வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

தற்போது ஜாமீனில் விடுதலை ஆன இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் ஆகியோரை சந்தித்தார். இந்த நிலையில் இன்று காலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். காலை 11.10 மணிக்கு வந்த அவர் சுமார் 30 நிமிட நேரம் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவன், கைது செய்யப்பட்ட போது எனக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதற்கு நன்றி தெரிவிக்கவே இன்று விஜயகாந்தை சந்தித்தேன். அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் சந்தித்து விட்டேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை இன்று சந்திக்க இருக்கிறேன் என்றார்.
திருச்செங்கோடு பள்ளியில் தேர்வின் போது 6 மாணவிகள் மது குடித்து விட்டு வந்ததற்கு அரசு தான் காரணம். மதுக்கடை இல்லையென்றால் அந்த மாணவிகள் மது குடித்திருக்க மாட்டார்கள். எனவே, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தேர்தலுக்காக அதை செய்யாமல் முன்கூட்டியே செய்ய வேண்டும்.
எனவே, மக்களிடம் மது விலக்கின் அவசியத்தையும், மது குடிக்க கூடாது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு பிரசார இயக்கத்தை வழி நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக அடுத்த மாதம் சென்னையில் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். இந்த கூட்டத்துக்கு மது விலக்கை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளையும் அழைக்க உள்ளோம். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம். நான் கைது செய்யப்பட்ட போது எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கோவன் தெரிவித்தார்.
தேமுதிக அறிக்கை
இந்த சந்திப்பு குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் கோவன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் இன்று (28.11.2015) சந்தித்தார். அப்பொழுது அவர் பாடிய பாடல்கள் கொண்ட குறுந்தகடுகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார். இச்சந்திப்பின் போது தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், மக்கள் அதிகார மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் உடனிருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications