ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலான ஆசிரியர் நியமன முறையை 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு ரத்து செய்தது.அதற்கு மாற்றாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு அடிப்படையிலும் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அதன் பிறகும் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து சமூக அநீதிக் கொள்கையை கடைபிடித்து வந்த தமிழக அரசுக்கு தனது கண்டனத்தின் மூலம் மத்தியச் சமூகநீதி அமைச்சகம் ‘குட்டு' வைத்துள்ளது.மத்தியச் சமூகநீதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு விதிகளை நடைமுறைப்படுத்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளுக்கும் இதே முறையை பின்பற்றி, குறைக்கப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு, கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்". இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications