நெல்லையில் சுகாதாரத்துறையினர் அதிரடி – குட்கா, கலப்படத் தேயிலை பறிமுதல்
நெல்லை: நெல்லையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தேநீர் கடைகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பாக்குகள், ஹேர் டை கலந்த டீ தூள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் கருணாகரன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சங்கரலிங்கம், காளிமுத்து, கலியாண்டி, இப்ராகீம் தலைமையிலான குழுவினர் நெல்லை சந்திப்பு தமு சாலையில் உள்ள டீக் கடைகள், ஹோட்டல்களில் அதிரடியாக இரண்டாவது சோதனையில் இறங்கினர்.
இதில் பான்பராக், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பாக்குகள் குவியல் குவியலாக மீட்கப்பட்டன. அங்குள்ள ஒரு ஹோட்டலில் சோதனை செய்த போது உணவு வகைகளை சுகாதாரமான முறையில் சமைக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மூடாமல் வைக்கப்பட்டிருந்த உணவு பண்டங்களை பார்த்த அதிகாரிகள் ஹோட்டல் ஊழியர்களை எச்சரித்தனர்.
சுதாரமற்ற முறையில் தரம் இல்லாத எண்ணெய்யில் சாப்பாடு தயார் செய்யப்படுவதை கண்டு விளக்கம் கேட்டு எழுதி தர சொன்னதால் ஊழியர்கள் மத்தியில் பதட்டம் உருவானது.
அங்கு சோதனை முடித்து விட்டு அதிகாரிகள் குழு டவுண் கீழ ரத வீதியில் சோதனை மேற்கொண்டது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அதை அப்படியே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். அதிகாரிகள் அந்த மூட்டையை சோதனை போட்டபோது அதில் 10 கிலோவுக்கும் மேல் ஹேர் டை கலந்த தேயிலை தூள் இருந்தது தெரிய வந்தது.
அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை மேலும் மூன்றாவது கட்டமாக பல இடங்களில் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.