தீவிரமடையும் வனக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்: 61 பேர் மயக்கம் – போலீஸ் குவிப்பு
மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையம் அரசு வனக் கல்லூரி மாணவ, மாணவிகளின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் 61 மாணவர்களின் நிலைமை மோசமாகி வருகிறது.
அரசுடன் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து நடுக்காட்டுக்குள் புகும் போராட்டத்தை மாணவர்கள் அறிவித்துள்ளதால் அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் பதற்றம் எழுந்துள்ளது.

பணியிட ஒதுக்கீடு
மேட்டுப் பாளையம் அரசு வனக் கல்லூரி மாணவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய போராட்டம் காரணமாக, 100 சதவீதம் வனச்சரகர் பணியிடங்களை வனவியல் படிக்கும் மாணவர்களுக்கே முந்தைய திமுக அரசு ஒதுக்கியது. அதனை 25 சதவீதமாக அதிமுக அரசு மாற்றியமைத்தது.
அமைச்சர்கள் வாக்குறுதி
அதைக் கண்டித்து தொடர் போராட்டங்களை மாணவர்கள் 6 மாதங்களுக்கு முன்பு நடத்திய போது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அது முடிந்ததும் உங்களின் கோரிக்கை நிறை வேற்றப்படும் என்று அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர்.
உள்ளிருப்பு போராட்டம்
வனவர் மற்றும் வனச்சரகர் பணியிடங்களில் வனவியல் கல்லூரி மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 2 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 27ஆம்தேதி முதல் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதப் போராட்டம்
இந்த நிலையில் வருகிற 22ஆம்தேதி நடைபெறவுள்ள வனவர் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் கடந்த 17ஆம்தேதி முதல் வினியோகிக்கப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த மாணவ-மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் களமிறங்கினர்.
பேச்சுவார்த்தை ரத்து
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதல்வர் தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில் அமைச்சர்கள் மற்றும் கல்லூரி சார்பில் 6 மாணவர்களும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், முறைப்படி எந்த தகவலும் வராததால் பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
மாணவர்கள் மயக்கம்
இதனையடுத்து மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமானது. 40 பேருக்கு மேல் மயக்கமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும், அதில் பலர், போராட்டத்துக்கு திரும்பி வர முடியாத நிலையும் இருப்பதால் 108 ஆம்புலன்ஸில் ஏற மறுத்தனர்.
வலுக்கட்டாயமாக அனுமதி
வலிப்பு வந்து துடித்த ஒரு மாணவி, சிகிச்சை பெற மறுத்தார். மாணவர்கள், அவரை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மயக்கமடைந்தவர்களில் சிலர் சிகிச்சை பெற்று திரும்பி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர்.
61 பேர் மயக்கம்
இன்றைய நிலவரப்படி, 5 நாட்களாக நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள 26 மாணவிகள் உள்பட 61 பேர் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற மாணவர்கள் இன்று மண்டியிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.
போலீஸ் கட்டுப்பாட்டில்
சிபிஐ(எம்எல்) மற்றும் எஸ்ஒஎப்ஐ என்ற மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், கல்லூரியின் பிரதான வாயிற் கதவு போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, பூட்டப்பட்டது.
நடுக்காட்டில் புகும் போராட்டம்
உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் வனக்கல்லூரி மாணவர்கள் நடுக்காட்டில் புகும் போராட்டத்தை அறிவித்துள்ளதை அடுத்து நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் எழுந்துள்ளது.
ஆ.ராசா சந்திப்பு
இதற்கிடையில், உண்ணாவிரதம் இருப்பவர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுவார் என உறுதி அளித்தார்.
அனுமதி மறுப்பு
இந்த நிலையில் திமுக, காங்கிரஸ், தமாக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் என எந்த கட்சியினரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களை சந்திக்க காந்திய மக்கள் இயக்கத்தினரும் நேற்று அனுமதிக்கப்படவில்லை. வனக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications