சிறுத்தை, புலி, மான்களுக்கு டிராக்டரில் வாட்டர் சப்ளை செய்யும் வனத்துறை
பொள்ளாச்சி: ஆனைமலை வனப்பகுதியில் டிராக்டரில் குடிநீர் வினியோகம் செய்து வனவிலங்குகள் தாகத்தை தணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதியில், வறட்சி நிலவி வரும் நிலையில், வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக டிராக்டர் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு, தொட்டிகளில் நிரப்பப்படுகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் பல்வேறு உயிரினங்கள் காணப்படுகின்றன. இதில் 320 வகையான பறவைகள், யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு, கடமான், புள்ளி மான், வரையாடு, சருகுமான், நீலகிரி மந்தி, சாம்பல்நிற மந்தி, புனுகுபூனை, தேவாங்கு, முதலை, நீர்நாய், ஆமை, ராஜநாகம், மலைப்பாம்பு என பல்வேறு வகை உயிரினங்கள் காணப்படுகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக மழைக்காலங்களில் வரும் நீரை சேமித்து வைக்கும் தடுப்பணைகள் மற்றும் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், கோடை காலங்களில் தொட்டிகள் மற்றும் தடுப்பணைகள் நீரின்றி வறண்டு விடுகின்றன. தண்ணீரை தேடி வனவிலங்குகள் அணை மற்றும் தண்ணீர் உள்ள ஓடைகளை தேடி வர வேண்டிய நிலை காணப்படுகிறது.
வனத்தைவிட்டு, வெளியேறும் வனவிலங்குகள் நீரை தேடிச் செல்லும் போது, விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்குமிடையே மோதல் போக்கு ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, வனப்பகுதியிலேயே நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், டாப்சிலிப் வனப்பகுதியில் வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தொட்டிகளில் நிரப்பப்பட்டு வருகின்றன.
இதைப் பற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் கே ஸ்ரீவத்சவா மற்றும் பொள்ளாச்சி சரக மாவட்ட வன அலுவலர் வேலுச்சாமி அறிவுறுத்தலின்படி, வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, தண்ணீர் டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்படுகிறது. இதன் மூலம் வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது"என்றனர்.












Click it and Unblock the Notifications