கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் பீதி
கோவை: கோவை அருகே கிராமத்திற்குள் ஒரே நேரத்தில் புகுந்த 14 காட்டு யானைகளை வனத்துறையினர் பலமணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் பொதுமக்கள் பீதியடையந்தனர்.
கோவை புறநகர் பகுதியையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வனவிலங்குகள் உணவு, குடிநீரை தேடி வனத்தையொட்டி உள்ள கிராம பகுதிகளுக்குள் படையெடுத்து வருகின்றன.

வனத்துறையினரும் வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இருப்பினும் யானைகள் உணவு, குடிநீரை தேடி வனத்தையொட்டி உள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில், கோவை குனியமுத்தூர் வனப்பகுதியில் இருந்து அதிகாலை வெளியேறிய 14 யானைகள் கொண்ட கூட்டம், அறிவொளி நகர் மற்றும் இட்டேரி நகர் பகுதிகளில் நுழைந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வீடுகளிலேயே முடங்கினர். இந்த யானைகள் அருகிலுள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்து நாசப்படுத்தின.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து பட்டாசுகள் வெடித்து, யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். அண்மை காலமாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுவது அதிகரித்து இருப்பதால், அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications