முன் ஜாமீனுக்காக போலி ஆவணங்கள்... சசிகலா புஷ்பா மீது மதுரை போலீஸ் வழக்கு!
மதுரை: முன் ஜாமீனுக்காக போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாக அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது புதிய வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
சசிகலாபுஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பெண்கள் பாலியல் புகார் கொடுத்து இருந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலி கையெழுத்து?
இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பாவும் அவரது குடும்பத்தினரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்தபோது, வழக்கறிஞர் முன்னிலையில் வக்காலத்து மனுவில் கையெழுத்து போடாமல் வெளிநாட்டில் இருந்து கொண்டு வக்காலத்து மனுவில் கையெழுத்திட்டது எப்படி என்று கேள்வி எழுப்பியது நீதிமன்றம்.
வழக்கு பதிய உத்தரவு
மேலும் முன் ஜாமீனுக்காக போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் மதுரை கோ.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடந்த 14-ந்தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை போலீஸ் வழக்கு
இதையடுத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது புதிய வழக்கு போடப்பட்டுள்ளது. அதாவது நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவித்தது; போலியான ஆவணங்களை இணைத்தது, மோசடி செய்தல் என்பது உள்ளிட்ட பிரிவுகளில் கோ.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில்.....
இதனிடையே சசிகலா புஷ்பா முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவெ சசிகலா புஷ்பாவை கடந்த மாதம் 6 வாரங்கள் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.