கட்சி விரோதம்... அதிமுகவிலிருந்து வேதாரண்யம் மாஜி எம்.எல்.ஏ. காமராஜ் டிஸ்மிஸ்!
சென்னை: சட்டசபைத் தேர்தலின்போது கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் வேதாரண்யம் நகர அதிமுக செயலாளர் என்.வி. காமராஜ் மீது முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.
வேதாரண்யம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. என்.வி.காமராஜ். இவர் வேதாரண்யம் நகரச் செயலாளராகவும் இருந்தார். இவருக்கு இந்த சட்டசபை தேர்தலின்போது போட்டியிட கிடைக்கவில்லை. அவருக்குப் பதில் மாவட்டச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று அமைச்சராகியும் விட்டார்.

தேர்தல் சமயத்தில் டிக்கெட் கிடைக்காத காரணத்தால் கடும் அதிருப்தி அடைந்த காமராஜ் தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. மணியனுடன் பிரசாரத்திற்கு செல்லவில்லை. அவர் மீது மேலும் பல்வேறு புகார்களும் கட்சி மேலிடத்திற்குச் சென்றன.
இந்த நிலையில் தற்போது காமராஜை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்ட தாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த என்.வி.காமராஜ் (வேதாரண்யம் நகரக் கழகச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியு்ளார்.
புதிய செயலாளர் எழிலரசன்
வேதாரண்யம் நகர கழகச் செயலாளர் பொறுப்பில் எஸ்.எம்.எழிலரசன் (முன்னாள் நகரச் செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications