சொத்துக் குவிப்பு வழக்கு: கோவை அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் கைது
கோவை: சொத்துக் குவிப்பு வழக்கில் கோவை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
கோவை அண்ணா பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் ரோடு ஜோதிபுரம் தனியார் மில் வளாகத்தில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. 2011ம் ஆண்டுக்கு பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டு, கோவை மண்டல மையமாக செயல்பட்டு வருகிறது.

2007ம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் துணைவேந்தராக இருந்தவர் ராதாகிருஷ்ணன் (55), அப்போது, பல்கலைக்கழகத்துக்கு மேஜை, பெஞ்ச் வாங்குவதற்கு தனியார் பர்னிச்சர் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. தனியார் நிறுவனத்திடம், இவர் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, தமிழக ஆளுநரிடம் அனுமதி பெற்று, ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். விசாரணையில், ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றதும், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 36 லட்சம் சொத்து குவித்ததும் தெரியவந்தது. இவரது பெயரிலும், மனைவி அமிர்தசஞ்சீவி பெயரிலும் சொத்துகள் வாங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, கோவை விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும், தன் மீதான ஊழல் மற்றும் சொத்து குவிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோவை விஜிலன்ஸ் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. ஆனால், விசாரணையின்போது ராதாகிருஷ்ணன் முறையாக ஆஜராகவில்லை.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றத்துக்காக அவரை கைது செய்யக்கோரி, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று கோவை சாயிபாபாகாலனியில் உள்ள அவரது வீட்டில் ராதாகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பின்னர், விஜிலன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.அவரை வரும் 31ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ராதாகிருஷ்ணனின் மனைவி அமிர்தசஞ்சீவிக்கும் கோர்ட் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications