மாஜி காதலியை மணக்க கணவனுக்கு விஷ மது பார்சல் அனுப்பிய விநாயகமூர்த்தி கைது
முன்னாள் காதலியை திருமணம் செய்வதற்காக அவளின் கணவனை கொல்ல விஷ மது பாட்டில் பார்சல் அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர்: முன்னாள் காதலியை கரம் பிடிக்க காதலியின் கணவனுக்கு தீபாவளி பரிசாக விஷம் கலந்த மது பாட்டிலை அனுப்பி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். விஷ மதுவை பார்சல் அனுப்பிய விநாயகமூர்த்தி என்ற வாலிபரை வேலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சினிமாவைவிட திகில் திரைக்கதையாக உள்ளது இந்த விஷ மது பாட்டில் சம்பவம். ஓசியாக பார்சலில் வந்த மது பாட்டிலை ஆசையாக குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் வேலூரை சேர்ந்த சதிஷ்குமார், 35. இவரது மனைவி கவுதமி.

தீபாவளி நாளில் மதுவை குடித்த சதீஷ் குமாரும் அவரது நண்பரும் ரத்த வாந்தி எடுத்தனர். இதையடுத்து இருவரும் இருவரும் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து, கிறிஸ்டியன் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீஸ் நடத்திய விசாரணையில் மதுவில் மோனோ ப்ரோட்டோ பாஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை ஊசி மூலம் செலுத்தியது தெரியவந்தது. பார்சலில் உள்ள முகவரியை கொண்டு விசாரித்த போது அது போலி முகவரி என்பது தெரியவந்தது.
மது பாட்டிலை அனுப்பியது யாராக இருக்கும் போலீசார் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டனர். சதீஷ்குமாரின் மனைவி கவுதமிக்கு அடிக்கடி செல்போனில் அழைப்பு வந்தது. அதனை போலீசார் ஆய்வு செய்த போது, விநாயகமூர்த்தி என்பவர் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பேசியது தெரியவந்தது.
யார் இந்த வியாவிநாயகமூர்த்தி என்று போலீஸ் விசாரித்ததில் அவர் சதீஷ்குமாரின் மனைவி கவுதமியின் முன்னாள் காதலன் என்றும், கவுதமியை திருமணம் செய்வதற்காக அவரது கணவரை கொல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. விநாயகமூர்த்தியை கைது செய்து அவரை லாடம் கட்டியதில் உண்மையை ஒத்துக்கொண்டார்.
விநாயகமூர்த்தி, கவுதமியின் காதல் கதை பற்றி ஒரு பிளாஷ் பேக் உள்ளது. கடந்த 5 வருடத்துக்கு முன் வேலூர் தனியார் கல்லூரியில் கலைநிகழ்ச்சியில் சதீஷ்குமாரும், கவுதமியும் சந்தித்துள்ளனர். இருவருக்குமிடையே காதல் ஏற்படவே அந்த காதல் முளைத்து வளரும் முன் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் அதன் பின்னர் இருவரும் சந்திக்கவில்லை.
பிரிந்த இருவரும் மீண்டும் ஃபேஸ்புக் மூலம் சந்திக்கவே விநாயகமூர்த்தி பேசியுள்ளார். அப்போது தனக்கு திருமணமாகிவிட்டதாக கவுதமி கூறவே, அதைப்பற்றி கவலையில்லை நீ வா நாம் திருமணம் செய்து கொள்வோம் என விநாயகமூர்த்தி கூறியுள்ளார். அதற்கு கவுதமி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
கவுதமியின் கணவரைக் கொன்று விட்டால் கவுதமி தனியாகி விடுவார். அதன் பின்னர் எளிதாக திருமணம் செய்யலாம் என்று நினைத்து திட்டமிட்டார் விநாயகமூர்த்தி. அப்போதுதான் மதுவில் விஷம் கலந்து அதை கூரியர் மூலம் சதீஷ்குமாருக்கு அனுப்பியிருக்கிறார். என்னதான் திட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டாலும் போன் மூலம் சிக்கிக் கொண்டார் விநாயகமூர்த்தி. இந்த சம்பவத்திற்கும் சதீஷ்குமாரின் மனைவிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
எமன் எப்படியும் வருவான் கூரியரில் மது வடிவத்திலும் வருவான் என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளுங்க மக்களே... கொலை செய்ய எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...












Click it and Unblock the Notifications