'அவரை விட்டால் வேறு ஆள் இல்லை' - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ரங்கசாமியை கரை சேர்ப்பாரா?
திருப்பரங்குன்றம்: 'புதுச்சேரி மக்களுக்கு என். ஆர். ரங்கசாமி அவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை' என்று முன்னாள் புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
காரைக்காலில் கடந்த பிப்.28ம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''என்னுடைய அரசியல் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும்" என்று பேசியிருந்தார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த என்.ஆர். காங்கிரஸ், புதுச்சேரியில் பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், என் ஆர் காங்கிரசை சேர்ந்த முன்னாள் புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழுக்காக பெருமை சேர்க்கக்கூடிய மதுரை மாநகரில் உள்ள திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தேன். புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய புதுச்சேரியில் அனைத்து தரப்பு மக்களும் ஆவலாக எதிர்பார்க்க கூடிய மக்கள் முதல்வர் என் ஆர் அவர்களுடைய தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று வேண்டி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்படுகிறேன்.
நிச்சயமாக திருப்பரங்குன்றம் குமரன் தங்களுடைய என் ஆர்ருக்கு ஆசி வழங்குவார். விரைவிலேயே புதுச்சேரியில் என் ஆருடைய ஆட்சி அமையும். மக்களுடைய அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படும். அவரை தான் இன்றைக்கு புதுச்சேரி மக்கள் அனைவரும் நம்பி இருக்கிறார்கள். புதுச்சேரி மக்களுக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. அவர் தான் விரைவில் புதுவையை ஆளப் போகிறார் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்" என்றார்.