ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டால் ராஜீவ் ஆன்மா மன்னிக்காது: கொதிக்கும் யசோதா
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவனில் மூத்த தலைவர் யசோதா தலைமையில் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டால் ராஜீவ் காந்தியின் ஆன்மா கூட மன்னிக்காது என்று கொந்தளித்துள்ளார் யசோதா.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதல் வேட்பாளர் பட்டியலில் 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலான வேட்பாளர்கள் இளங்கோவன் ஆதரவாளர்களாகவே இருந்தனர். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால், ப.சிதம்பரமும், அவரது ஆதரவாளர்களும் மிகுந்த அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் 2ம் வேட்பாளர்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதிலும் இளங்கோவன் ஆதரவாளர்களே அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். பல தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மூத்த காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான யசோதா விருப்பமனு அளித்திருந்தார். ஆனால் அந்த தொகுதி செல்வப்பெருந்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே இன்று சத்தியமூர்த்தி பவன் முன்பு யசோதா தலைமையில் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். ஈவிகேஸ் இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய யசோதா, தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை என்று கூறினார். அதே நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டால் ராஜீவ்காந்தியின் ஆன்மா மன்னிக்காது என்று கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்த செல்வப்பெருந்தகைக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். அவர் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தியவர் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியில் தலித்துகள், பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள் யசோதாவிற்கு எதிராக முழக்கமிட்டனர். ஒரே நேரத்தில் இரண்டு கோஷ்டி தலைவர்களும் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரவக்குறிச்சி தொகுதியை கேட்டு வாங்காத ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக ஜோதிமணி போர்க்கொடி உயர்த்தினார். இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் கட்சித்தலைவர் யசோதாவும் இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.