கடலூர் மழையில் வந்த பிரசவ வலி... ரிப்பேர் ஆன 108 ஆம்புலன்ஸ் - உயிரைக் காத்த ரவீந்திரன்
சிதம்பரம்: கடும் புயல் மழை வெள்ளத்தில் வலி ஏற்பட்டு துடித்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் சென்ற போது, தடைகள் பல ஏற்படவே, அவற்றை நீக்கி, சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்துள்ளார் கிள்ளை முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவீந்திரன். தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
சிதம்பரம் அருகே கிள்ளை தைக்கால் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி செல்வக்குமாரி, 25. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு தீபாவளி தினமான செவ்வாய்க்கிழமையன்று காலை பிரசவவலி ஏற்பட்டது. இதனையடுத்து. 108 ஆம்புலன்ஸில் செல்வக்குமாரியுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.
அப்போது சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலை எதுவும் தெரியவில்லை. ஆம்புலன்ஸ் போகமுடியாத அளவிற்கு மின்கம்பங்கள், மரங்கள் சாலையில் விழுந்து கிடந்தன. இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வெங்கடேசன், கிள்ளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவீந்திரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ரவீந்திரன் தனது ஜீப்பில் ஆட்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினார்.
அப்போது, ஏற்பட்ட பலத்த காற்றில் கிள்ளை ரயில்வே கேட் மூடிக்கொண்டதோடு, ஆம்புலன்சும் பழுதாகி நின்று விட்டது. பின்னர் தனது ஆட்களை கொண்டு கேட்டை தூக்கிய அவர், ஜீப்பில் கயிற்றை கட்டி ஆம்புலன்ஸை இழுத்து வந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண் செல்வக்குமாரிக்கு தீபாவளி தினத்தன்று பிற்பகல் 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது, தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரியான நேரத்தில் உதவி செய்து கர்ப்பிணி பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றிய ரவீந்திரனுக்கு செல்வராஜின் குடும்பத்தினர் மட்டுமல்லாது கிள்ளை கிராம மக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications