டீக்கடை வேலை முதல் ரூ.3.5 கோடி கார்கள் வரை.. ஆசிரியரை ஆள்வைத்து அடித்த அருளானந்தத்தின் பின்னணி
சென்னை: டீக்கடையில் வேலை பார்த்த அருளானந்தம் சதுரங்க வேட்டை மோசடிகளின் மூலம், மூன்றரை கோடி ரூபாய் விலையுள்ள கார் வாங்கும் அளவுக்கு வசதி வாய்ப்பை பெருக்கிக் கொண்டவராகும். பணம் பத்தும் செய்யும் என்ற சித்தாந்தத்தின் நம்பிக்கை வைத்ததன் விளைவு இப்போது மகனை அடித்த ஆசிரியரை ஆள் வைத்து அடித்து கம்பி எண்ணும் நிலைக்கு அவரை கொண்டு சென்றுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருப்பவர் பாஸ்கர் ராஜ். கடந்த 20ம் தேதி நான்கைந்து பேர் பள்ளிக்குள் நுழைந்து அவரை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்கள். நிலைகுலைந்து சரிந்தார் அந்த ஆசிரியர். ஆசிரியர் பாஸ்கரின் பின் மண்டை மற்றும் கைகளில் ரத்தம் கசிந்து, கன்னங்கள் வீங்கி சுயநினைவற்ற நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டு பொங்கி எழுந்த பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோடம்பாக்கத்தையே ஸ்தம்பிக்கச் செய்தனர்.
சிசிடிவி கேமராவில் பதிவான தாக்குதல் சம்பவத்தை சிடியாக வெளியிட்டு பார்த்த அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்தது பள்ளி நிர்வாகம். கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் ஆசிரியரை பள்ளிக்குள்ளேயே புகுந்து தாக்க யாருக்கு துணிச்சல் வந்தது என்று விசாரித்தபோதுதான் வெளியே தெரிந்தது 'தொழிலதிபர்' அருளானந்தத்தின் சுய ரூபம். பொதுமக்களின் நெருக்கடியால், அருளானந்தம் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த அருளானந்தத்தின் மகன் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். உடற்பயிற்சி ஆசிரியரை பார்த்து விசிலடித்து கேலி செய்த அந்த சிறுவனை தலையில் குட்டி, தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றதுதான் பாஸ்கர் செய்த குற்றமாம். சிறுவன் தனது தந்தைக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்-சை தொடர்ந்து அருளானந்தத்தின் ஆபீசில் வேலை பார்க்கும் அடியாட்கள் பள்ளிக்கே வந்து தங்கள் முதலாளி மீது வைத்துள்ள விசுவாசத்தை இப்படி காட்டியுள்ளனர்.

வாய்க்கு எளியவர் ஆசிரியரா?
வசதிபடைத்தவர் என்றால் வாத்தியாரையே அடிக்க துணிவு வந்துவிடுமா? அப்படிப் பார்த்தால் அம்பானி, டாடா குழந்தைகள் பள்ளியில் அடி வாங்கியிருக்கவே வாய்ப்பில்லையா. அப்படியெல்லாம் இல்லை. உழைத்து சம்பாதித்த பணம் என்றால் அதனால் அகங்காரமும் சேர்ந்து வராது, ஆனால், ஊரை ஏமாற்றி சம்பாதித்து திடீர் பணக்காரராக ஆன அருளானந்தத்திற்கு பண்பு இல்லாமல் போனதில் வியப்பில்லை என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.

யார் இந்த அருளானந்தம்?
திருச்சியை சேர்ந்த அருளானந்தம் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு உறவுக்காரர் டீக்கடையில் எடுபிடி வேலை பார்த்து வந்தவராம். அதன்பிறகு காங்கிரஸ் கட்சி கவுன்சிலருக்கு சொந்தமான கேபிள் நிறுவனத்தில், பணியாற்றியுள்ளார். அதுதான் அருளானந்தம் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பு முனை.
கேபிள் தொழில் மூலமாக மக்களிடையே அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கிய அருளானந்தம் படிப்படியாக முன்னேறி திருச்சியில் இருந்து சென்னை, கோடம்பாக்கத்தில் 'ரிச் இந்தியா' என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி தொழிலை தொடங்கியுள்ளார்.
இதனால், நீதிபதிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் என முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் அருளானந்தத்தின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து உள்ளன.

மோசடிகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு காந்தப் படுக்கை மோசடி தொடர்பாக தமிழகத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். திருச்சியில் காந்தப் படுக்கை மோசடி தொடர்பாக அருளானந்தம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை இப்போதும் நடந்து வருகிறது. மேலும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் மோசடி தொழிலிலும் இவர் கொடி கட்டி பறந்துள்ளார். இதனால்தான் சதுரங்க வேட்டை அருளானந்தம் என்ற காரணப்பெயரை சூட்டியுள்ளனர் சில போலீசார். சதுரங்க வேட்டை திரைப்படத்தில் கூறுவதை போல ஆசையை காண்பித்து மக்களிடம் அபேஸ் செய்வதுதான் இவரது பாணி.

கார்கள்
ஏமாந்த மக்களிடமிருந்து பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியதால், ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார் அருளானந்தம். இவர் வைத்திருக்கும் கார் ஒன்றின் மதிப்பு மூன்றரை கோடி ரூபாயாம். அதுமட்டுமா, பென்ஸ், ரேஞ் ரோவர் என புகழ்பெற்ற சொகுசு கார்கள் அவர் வீட்டில் அணி வகுத்து நிற்கின்றன.
திருச்சியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 7 ஸ்டார் ரிசார்ட் ஒன்றையும் கட்டிவருகிறார். பணத்திலேயே புரண்ட அருளானந்தத்தின் மகனுக்கும், குரு பக்தி, பிறரை மதிக்கும் குணம் அற்றுப்போய் விட்டது. ஒழுக்கத்தை சொல்லித்தரும் நிலையில் அருளானந்தம் இல்லை என்பதே இதற்கு மூல காரணம்.

பரிதாப நிலையில் பாஸ்கர்
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பாஸ்கரை வயது முதிர்ந்த அவரது தாய் காந்தா கவனித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications