2 மாஜி சபாநாயகர்கள் மகன்களுக்கு சீட் கொடுத்த திமுக!
மதுரை: தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர்கள் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மற்றும் சேடபட்டி முத்தையா ஆகியோரது மகன்களை மதுரை(மத்தி) மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது திமுக.
திமுகவுக்கு முன்னோடி இயக்கமான நீதிக் கட்சி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பி.டி.ராஜன். அவரது மகன் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் திமுகவின் மூத்த தலைவராக திகழ்ந்தவர். 1996-2001ஆம் ஆண்டு தமிழக சட்டசபை சபாநாயகராகப் பணியாற்றியவர்.

2006-ம் ஆண்டு தேர்தலில் மதுரை (மத்தி) சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். திமுக ஆட்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுவிட்டு மதுரைக்கு ரயிலில் திரும்பும்போதே மாரடைப்பால் காலமானார்.
அவரது மகன் பி.டி.ஆர்.பி. தியாகராஜன் தற்போதைய தேர்தலில் திமுகவின் மதுரை(மத்தி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி என்.ஐ.டி.யில் பொறியியல் பட்டம் பெற்ற தியாகராஜன், நியூயார்க் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றியவர்; உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் நிதி ஆலோசகராக இருந்தவர்; சிறந்த கல்வியாளரான தியாகராஜன் தற்போது அரசியல்வாதியாக தேர்தல் களத்தில் நிற்கிறார்.
இதேபோல் 1991-96ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டசபை சபாநாயகராக இருந்தவர் சேடபட்டி இரா. முத்தையா. அவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தற்போது மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் சேடபட்டி முத்தையா மகன் மணிமாறன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் திருமங்கலத்தில் மணிமாறன் போட்டியிட்டார். ஆனால் தற்போது திருமங்கலம் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் மணிமாறன் திருப்பரங்குன்றம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications