எம்.ஜி.ஆர் மருமகன் விஜயன் கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மருமகன் விஜயன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன். இவர், கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்து விஜயனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது.

இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையின்போது, விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு, கூலிப்படை மூலம் விஜயனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. கருணா என்ற போலீஸ்காரர் இந்த கூலிப்படையை அமர்த்தி கொலைக்கு உதவி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பானு, போலீஸ்காரர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், ஆர்.கார்த்தி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தேடப் பட்ட பள்ளி ஆசிரியை புவனா வெளிநாட்டுக்கு தப்பியதால், அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் மொத்தம் 119 சாட்சி ஆவணங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 79 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில், போலீஸ் தரப்பில் சிறப்பு அரசு வழக் கறிஞர் விஜயராஜ் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கின் இறுதிகட்ட வாதம் நிறைவடைந்ததையடுத்து வரும் ஜூலை 13ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார்.
விஜயன் கொலை வழக்கின் தீர்ப்பினை இன்று (புதன்கிழமை) பிற்பகல் வாசித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு 7 பேரும் தலா 10000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் அபராதம் கட்டத் தவறினால் 6 மாதங்கள் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 8 ஆண்டாக நடந்த வழக்கில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications