சென்னையில் பெட்ரோல் குண்டு வீச்சு- தி.வி.கவினர் 4 பேர் தே.பா. சட்டத்தின் கீழ் கைது
சென்னை: சென்னையில் தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாக திராவிடர் விடுதலை கழகத்தினரை சேர்ந்த 4 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மந்தைவெளி, மயிலாப்பூர் தபால் நிலையங்கள் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் தபால் நிலைய பொருட்கள் நாசமாகின.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தின் உமாபாதி, ராவணன், மாரிமுத்து, மனோகரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 4 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பேன் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே மத்திய அரசு அலுவலகமான தபால்நிலையம் மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.