டாக்டர்களின் போராட்டத்தால் 4 நோயாளிகள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் நேற்று நடத்திய போராட்டத்தால் 4 நோயாளிகள் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் நேற்று நடத்திய போராட்டத்தால் 4 நோயாளிகள் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்களே இதற்கு காரணம் என்று கூறிய உறவினர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாக கூறிய சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மருத்துவர்களின் போராட்டத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் போராட்டத்தால் மருத்துவமனை வளாகமே ஸ்தம்பித்து போயிருந்தது.

4 பேர் பலி - அதிர்ச்சித் தகவல்
மருத்துவர்களின் போராட்டம் கிட்டதட்ட இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் 4 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் கொதித்துள்ள நோயாளிகளின் உறவினர்கள் காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

என்ஜினியரிங் மாணவர்
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு கெமிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் மாணவரான விஜய் கடந்த 14ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொதுவார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரிடம் பேட்டி எடுப்பதற்காக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் உள்ளே சென்றுள்ளார்.

செய்தியாளரிடம் புகார்
அப்போது அங்கிருந்த விஜய்யின் உறவினர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று தெரிவித்தனர். விஜய்யின் உறவினர்கள் செய்தியாளரிடம் பேசுவதை பார்த்த பயிற்சி மருத்துவர்கள், செய்தியாளரை தாக்கி அவரை வெளியே விரட்டியதாக கூறப்படுகிறது.

மோதலில் ஈடுபட்ட மருத்துவர்கள்
பின்னர் விஜயை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் நேற்று மதியம் வந்தனர். அப்போது அவர்களை உள்ளே விட அங்குள்ள டாக்டர்களும், பாதுகாவலர்களும் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அங்குள்ள பயிற்சி டாக்டர்களுக்கும், விஜயின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பெண்கள் சிலரை பயிற்சி டாக்டர்கள் தள்ளிவிட்டு விரட்டியதாக கூறப்படுகிறது.

பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதம்
அப்போது, பொய்யான புகாரின் பேரில் லக்னோ போலீசாரால் கைது செய்யப்பட்ட மருத்துவர் சுதிரை மீட்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள் 3 நாட்களாக போராட்டம் நடத்தியதை ஏன் எடுக்க வரவில்லை என்று கேள்வி எழுப்பி பத்திரிகையாளர்களை திட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் புகார் அளிக்க சென்றனர்.

4 உயிர்கள் பலியாக காரணம்
அப்போது தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களின் இந்த போராட்டமே 4 உயிர்கள் பலியாக காரணமாக இருந்துள்ளது. மக்கள், கடவுள் என்று போற்றும் மருத்துவர்கள் இனியாவது பொறுப்புடன் நடந்து கொள்வார்களா என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது...












Click it and Unblock the Notifications