பட்டப்பகலில் பாதுகாப்பை மீறி கைதி கொலை... 4 போலீசார் அதிரடி சஸ்பென்ட்
நெல்லையில் பட்டப்பகலில் கைதி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்
நெல்லை: நெல்லையில் பட்டப்பகலில் கைதி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். கணவர் கொலை குறித்து மனு அளிக்க சென்ற கைதி சிங்காரத்தின் மனைவியிடம் நெல்லை காவல் ஆணையர் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் பாளையங்கோட்டை நீதிமன்றத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கைதி சிங்காரம் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அப்போது போலீஸ் வாகனத்தை வழிமறித்த 13 பேர் கொண்ட கும்பல் மிளகாய்ப் பொடி கரைசளை போலீசார் மீது தெளித்து சிங்காரத்தை வெளியில் இழுத்துப் போட்டு சரமாரியாக வெட்டினர்.

பின்னர் சிங்காரம் இறந்ததாக கூறி அந்தக்கும்பல் தப்பியோடியது. இதையடுத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் கைதி சிங்காரத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் சிங்காரத்தின் மனைவி தனது கணவர் கொலை குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி நெல்லை கமிஷனரிடம் புகார் அளிக்க சென்றார். அப்போது சிங்காரத்தை அழைத்து சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வீரபாகு, மரிய பிஸ்டன், பாலசுப்பிரமணியம் மற்றும் வாகன ஓட்டுநர் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேரை சஸ்பென்ட் செய்துள்ளதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கைதி சிங்காரம் கொலை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சிங்காரம் உடலை பெற்றுக்கொள்ள அவரது மனைவி பார்வதி சம்மதம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications