சென்னை: முட்புதரில் பதுங்கியிருந்த 4 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது
சென்னை: சென்னையில் முட்புதரில் பதுங்கி சதித்திட்டம் தீட்டி வந்த ரவுடிகள் நான்கு பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
கடந்த 13ம் தேதி காணாமல் போன டிசிஎஸ் நிறுவன பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் உமா மகேஸ்வரியின் உடல் கடந்த சனிக்கிழமையன்று சென்னை சிறுசேரி ஐடி பூங்கா வளாகத்தில் முட்புதரில் கண்டெடுக்கப் பட்டது. உடலில் கத்திக் குத்துக் காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப் பட்ட உமா மகேஸ்வரி, பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பிணம் இத்தனை நாட்களாக சிப்காட் வளாகத்தில் கிடந்தும் அதைக் கண்டுபிடிக்காமல், சரியாக துப்பு துலக்காமல் இருந்ததற்காக கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது, உமா மகேஸ்வரி கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ஆளில்லா விமானம் மூலம் தடயங்கள் சேகரிப்படுகின்றன. உமா மகேஸ்வரியைக் கொலை செய்த குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை, கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் ரயில்வே கேட் அருகே உள்ள முட்புதரில் சந்தேகப் படும் வகையில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மணி மாறன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முட்புதரில் பதுங்கியிருந்த நபர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.
ஆனபோதும், ஒருவன் தப்பிவிட மீதமிருந்த 4 பேரையும் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஜெயராமன், மாடம்பாக்கம் ராஜி, கன்னிவாக்கம் சரவணன், தைலாவரம் புருஷேத்தமன் என்பது தெரிய வந்தது.
மேலும், தப்பி ஓடிய மற்றொரு ரவுடியின் பெயர் நந்திவரம் கத்திகண்ணன் என்பதும், முட்புதரில் பதுங்கி அவர்கள் குற்றச் செயல் செய்ய சதி திட்டம் தீட்டி வந்ததும் உறுதியானது.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய கத்திகண்ணனையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications