சென்னையில் இருந்து ஆந்திர, கர்நாடக, கேரளா அரசு பஸ்களில் இலவசமாக பயணிகலாம்
சென்னை: சென்னை கோயம்பேட்டில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்திற்கு இலவசமாக பயணிக்கலாம் என்று அந்தந்த மாநிர அரசு போக்குவரத்து கழகங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் தொடர்மழை நின்று விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் வடிந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால் குடிநீர், உணவு இன்றி தவித்த மக்கள் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.
4 நாட்களாக இருட்டிலும், வெள்ளத்திலும் உணவு, குடிநீர் இன்றி தவித்த மக்கள், சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ஊருக்கு சென்ற உறவினர்களை பார்த்தால் சற்று ஆறுதலாக இருக்கும் என்று கருதி பலரும் பயணத்தை தொடருகின்றனர்.
சென்னையில் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள். சிறப்பு ரயில்களிலும், பஸ்களிலும் பகலிலேயே பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் பண்டிகைக் காலம் போன்று பரபரப்பாக காணப்படுகிறது. வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு செல்லவும் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகளவு குவிந்தனர்.
ஆம்னி பேருந்துகளில் கட்டணக்கொள்ளையாக உள்ளது. எனவே ஏ.டி.எம்களில் பணம் எடுக்க முடியாமல் பரிதவித்து வரும் பலரும் செய்வதறியாது தவித்து வந்தனர். இதனிடையே சென்னையில் மழை ஏற்படுத்திய காணாத பாதிப்பை அறிந்த கேரளா, கர்நாடக, ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகங்கள் இலவச பயணத்தை இன்று அறிவித்துள்ளது.
அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையில் வேலை செய்து வருகின்றனர். கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ரயில் சேவை முழுமையாக நடைபெறாத நிலையில் மூன்று மாநில அரசு போக்குவரத்து கழகமும் இலவசமாக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது ஆறுதலை தந்துள்ளது.
கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா, கர்நாடக, கேரளா மாநிலங்களுக்கு செல்லக்கூடிய அந்த மாநில பஸ்களில் இன்று இலவசமாக பயணம் செய்யலாம். பெங்களூர், மங்களூர், திருப்பதி, ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல நகரங்களுக்கு மக்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.