ராமேஸ்வரத்தில் வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம்: மூவர் கைது
ராமேஸ்வரம்: வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 ராமேஸ்வரம் வாலிபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அருகே வில்லூண்டி தீர்த்தம் எனும் கடற்கரை பகுதி உள்ளது. ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரை பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.
நேற்று மாலை இந்த கடல் பகுதிக்கு, தற்போது புதுச்சேரியில் வசித்து வரும் அமெரிக்காவை சேர்ந்த லாராடேனிஸ் தனது நண்பரான பிரான்ஸ்ஸை சேர்ந்த ஜார்ஜ்மெய்லியுடன் வந்துள்ளார்.
அமைதியான கடலின் அழகினை ரசித்த லாராடேனிஸ், முகத்தில் சுவாச கருவியினை பொறுத்தி கொண்டு கடலில் நீச்சல் அடித்து கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, அந்த பகுதிக்கு வந்த தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த யாகப்பா, லியோன், ஆக்னால்ட் ஆகிய 3 இளைஞர்களும் கடலில் நீந்தி கொண்டிருந்த லாராடேனியலின் அருகில் சென்று கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த லாராடேனியல் கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த ஜார்ஜ்மெய்லி, சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்களிடம் இருந்து லாராடேனியலை மீட்டுள்ளார். பின்னர், இந்த சம்பவம் குறித்து புகார் செய்ய இருவரும் தங்கச்சிமடம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த போலீசார் புகாரை வாங்காமல் வெளிநாட்டு பயணிகள் இருவரையும் அனுப்பி உள்ளனர்.
அதன்பின், ராமேஸ்வரத்தில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்ய வந்துள்ளனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீண்டும் தஙக்ச்சிமடம் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு பின் புகாரை பெற்று கொண்ட தங்கச்சிமடம் போலீசார், லாராடேனியலிடம் சில்மிஷத்தில் ஈடுபடட் மூவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
பாதிப்புக்குள்ளான வெளிநாட்டினரின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய போலீசார், அவர்களை 3 மணி நேரத்திற்கு மேலாக காவல் நிலையத்திலேயே அமர வைத்து புகாரினை வாபஸ் பெறுமாறு போலீசார் கூறியிருக்கின்றனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்து செய்தியாளர்கள் தங்கச்சிமடம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கு இருந்த போலீசார் சரியான தகவல் தெரிவிக்காததால் செய்தியாளர்கள் இதை டி.எஸ்.பி. விஜயகுமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பின் ஒருவழியாக வெளிநாட்டினரின் புகாரின்பேரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 நபர்கள் மீதும் போலீசார் வேறு வழி இல்லாமல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.