சென்னையில் நாளை முதல் மதுபான பார்கள் திறப்பு? குடிமகன்கள் குஷி
சென்னையில் நாளை மதுபான பார்கள் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் குடிமகன்கள் மிகவும் குஷியாக உள்ளனர்.
சென்னை: நெடுஞ்சாலை ஓரம் மதுபான விடுதி நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்த நிலையில் நாளை முதல் சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் பார்கள் திறக்கப்படும் என்று தெரிகிறது.
குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏராளமான விபத்துகள் ஏற்படுவதாக கூறி நெடுஞ்சாலைக்குள் 500 மீட்டருக்குள் டாஸ்மாக் கடைகளும், மதுபான விடுதிகளும் வைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 500 மீட்டருக்குள்பட்ட 3000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் நகர எல்லைக்குள் மதுபான பார்கள் செயல்பட எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது. இந்த விளக்கத்தை தொடர்ந்து நாளை முதல் சென்னையில் பார்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அவ்வாறு திறக்கும் பட்சத்தில் சென்னை காஸ்மோபாலிட்டன், ஜிம்கானா, எம்ஆர்சி ஆகிய கிளப்புகளில் திறக்கப்படலாம். அதேபோல் மேரியாட்,ஹயாத், ரெயின்ட்ரீ, தி பார்க், பார்க் ஹயத், லீ மெரீடியன், ஜிஆர்டி, ஹில்டன் போன்ற ஹோட்டல்களிலும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பார்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications