அனுமதியின்றி சென்றதே குரங்கணி தீ விபத்துக்கு காரணம்- சட்டசபையில் முதல்வர் விளக்கம்
அனுமதி பெறாமல் மலையேற்றத்திற்கு சென்றதால்தான் குரங்கணி தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: அனுமதி பெறாமல் மலையேற்றத்திற்கு சென்றதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குரங்கணி மலையில் காட்டுத் தீயால் 17 பேர் உயிரிழந்தது குறித்து சட்டசபையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில் குரங்கணி காட்டுக்குள் சென்ற பெண்களுக்கு வழிக்காட்டிகள் அனுப்பப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார். மலையேற்றப் பயிற்சிக்கு செல்ல நுழைவுக் கட்டணத்தை சுற்றுலாப் பயணிகள் செலுத்தியுள்ளனர் என்றும் தீ விபத்தில் சுற்றுலாப் பயணிகள் சிக்காமல் வனத்துறை அதிகாரிகள் தடுத்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார். மேலும் காட்டுத் தீயில் சிக்கி இறந்ததை இயற்கை பேரிடராக பார்க்க முடியாது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். கடந்த 10ஆம் தேதியன்று மலையேற்ற குழுவினர் 27 பேர் கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத்திற்கு சென்றனர். அப்போது தீ எதுவும் இல்லை. கடைசியாக பிப்ரவரி 15ஆம் தேதியன்று ஏற்பட்ட தீ வனத்துறையினரால் அணைக்கப்பட்டது.
சென்னை, திருப்பூர், ஈரோடில் இருந்து மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் தனியார் தேயிலை தோட்டத்தில் தங்கியிருந்து விட்டு மார்ச் 11ஆம் தேதியன்று தீ விபத்தில் சிக்கினர்.
மலையேற்றத்திற்கு அனுமதி இல்லாத பாதை வழியாக அனைவரும் சென்றதே தீ விபத்தில் சிக்க காரணம். தீ விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் உடனடியாக மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அமைச்சர்கள், வருவாய் துறை செயலாளர்கள், தீயணைப்புத்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டது.
10 பேர் உடனடியாக காயமின்றி மீட்கப்பட்டனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். 9 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. உடனடியாக தீ விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிச்சாமி, எளிதில் தீப்பற்றக்கூடிய சுக்குநாரி புற்கள் அதிகம் இருந்ததால் தீ வேகமாக பரவியிருக்கிறது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அனுமதியின்றி மலையேற்ற பயிற்சிக்கு அழைத்து சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா இரண்டு வார காலத்தில் தனது அறிக்கையை அளிப்பார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications