சத்தியமூர்த்தி பவன் பக்கம் போகக் கூட முடியாது வாசன் தரப்பால்!
சென்னை: மூப்பனார் காங்கிரஸ் கட்சியை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கியதும், அதிரடியாக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனைக் கைப்பற்ற முடிந்தது. ஆனால் அப்போது உள்ளது போன்ற நிலைமை தற்போது இல்லை. எனவே வாசன் தரப்பால் சத்தியமூர்த்தி பவனைக் கைப்பற்றுவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களோடு விலகி வி்ட்டார். சில ஆதரவாளர்கள் மட்டும் விலகாமல் காங்கிரஸில் தொடர்கின்றனர்.
இந்த நிலையில் அடுத்து புதிய கட்சியின் பெயர், கொடி, திட்டம் போன்றவற்றை அறிவிக்கவுள்ளார் வாசன்.

சத்தியமூர்த்தி பவன்...
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை வாசன் தரப்பு கைப்பற்ற முயற்சிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மூப்பனாரால் முடிந்தது...
இப்படித்தான் மூப்பனார் தமாகாவை உருவாக்கியபோது அவரது கட்சியினர், சத்தியமூர்த்தி பவனை அப்படியே கைப்பற்றிக் கொண்டனர்.
வாசனால் முடியாது...
ஆனால் மூப்பனார் செய்தது போல இப்போது வாசனால் செய்ய முடியாது என்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கிய சத்திய மூர்த்தி பவன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் வளாகம், காமராஜர் அரங்கம் உள்ளிட்டவை இந்த அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்படுகிறது.
நான்கு அறக்கட்டளை உறுப்பினர்கள் கையில்...
இந்த அறக்கட்டளை கட்சியின் மூத்த தலைவர்கள் 4 பேரின் மேற்பார்வையில் செயல்படுகிறது. அறக்கட்டளை சொத்துக்களின் பேரில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவையும் இவர்கள் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும்.
ஆதரவு...
அப்போது இருந்தவர்கள் அப்படியே மூப்பனாரை ஆதரித்ததால் மூப்பனார் தமாகாவைத் தொடங்கியபோது, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பெறுப்பாளர்களாக ஜி.கே.மூப்பனார், ப.சிதம்பரம், ப.ராமச்சந்திரன், என்.ராமசாமி உடையார் ஆகியோர் இருந்தனர். அனைவரும் மூப்பனார் முடிவை ஆதரித்தனர். எனவே சத்தியமூர்த்தி பவன் த.மா.க.விடமே இருந்தது.
இப்போது நி்லைமை வேறு...
ஆனால் இப்போது நிலைமை வேறாக உள்ளது. அறக்கட்டளை நிர்வாகிகளாக இப்போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், ஜி.கே.வாசன், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா ஆகியோர் உள்ளனர்.
ஆதரவே இல்லை...
வாசன் தவிர மற்ற மூன்று பேருமே வாசனுக்கு ஆதரவாக இல்லாதவர்கள். ஜெயந்தியும், நாச்சியப்பனும், யசோதாவும் தனித்து செயல்பட்டு வருபவர்கள். இவர்களில் ஜெயந்தியும், யசோதாவும் இளங்கோவனை ஆதரிக்க ஆரம்பித்துள்ளனர். நாச்சியப்பன் ப.சிதம்பரம் எதிர்ப்பாளர். ஆனால் வாசனை இவர் ஆதரிக்க மாட்டார்.
வேற இடம் பார்க்க வேண்டியதுதான்...
எனவே சத்தியமூர்த்தி பவன் இருக்கும் பக்கமே போக முடியாத நிலையில்தான் வாசன் தரப்பு உள்ளது. புதிய அலுவலகத்தில்தான் அவரது புதிய கட்சியை நடத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications