சிலிண்டர் மானியம் குறைப்பு... ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்: வாசன் கவலை
சென்னை: சிலிண்டர் மானியத்தை குறைக்கும் மத்திய அரசின் செயல்பாட்டால் மக்கள் பெரும் பாதிப்படைவார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுத்துறை எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மக்களுக்கு ஆண்டுக்கு 12 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் நேரடி மானியத் திட்டம் மூலம் வழங்கப்படும் என்று ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. புதிய முறைப்படி வங்கி மூலம் தான் மானியம் பெற வேண்டும் என்பதற்காக நுகர்வோர் ஆதார எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் அவர்களது வங்கிகளுடன் இணைக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் இந்த திட்டத்திற்கு 50 சதவீத மக்கள் மட்டுமே இதுவரை பதிவு செய்திருக்கிறார்கள்.

பதிவு செய்தவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 600 ரூபாயும், பதிவு செய்யாதவர்களுக்கு 400 ரூபாயும் வருகின்ற மார்ச் மாதம் வரை வினியோகிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இதற்கிடையே வங்கியில் பதிவு செய்யாத ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சமையல் எரிவாயு பதிவு செய்யும் போது ரூபாய் 400-க்கு உட்பட்ட மானியத்துடன் கூடிய சிலிண்டர் தர மறுக்கிறார்கள். அதற்குண்டான காரணத்தை வினியோகஸ்தர்களிடம் கேட்கும் பொழுது நீங்கள் வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் அட்டை எண் பதிவு செய்தால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும் என நிர்பந்திக்கிறார்கள்.
ஆரம்பத்தில் மானியம் ரூபாய் 300 என்றும், தற்போது மானியம் ரூபாய் 200 என்றும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மானியம் படிப்படியாக குறையுமோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மானியத்தை குறைக்கும் மத்திய அரசின் செயல்பாட்டால் ஏழை, எளிய, நடுத்தர, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே மானியத்துடன் கூடிய சிலிண்டர் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய நேரத்தில் தொடர்ந்து கிடைப்பதற்கு மத்திய அரசும், ஆயில் நிறுவனங்களும் முன் வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications