ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து ஒடிந்த கிளை அல்ல... உதிர்ந்த இலை: தாக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சிவகங்கை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியதை, மரத்தில் இருந்து உதிர்ந்த இலை என விமர்சித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், புதிய கட்சி தொடங்கபோவதாக அறிவித்தார். கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவைகள் குறித்து திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஜி.கே.வாசன் வெளியேற்றத்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதனை காங்கிரஸ் நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒடிந்த கிளை தான் ஜி.கே.வாசன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சிவகங்கையில், நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மோடியின் பொய் பிரச்சாரம்
"கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரிய தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் மீது மக்கள் மத்தியில் மோடி தனது பொய் பிரசாரத்தால் கோபத்தை உருவாக்கினார். பொய் பிரசாரம் செய்வதில் மோடி, திராவிடக்கட்சிகளை மிஞ்சி விட்டார். சர்வாதிகாரியாக வேண்டும் என்பதற்காக மாநில கட்சிகளை ஒழித்துவிட மோடி நினைக்கிறார்.
சிதம்பரம் கருத்து
மரத்தில் இருந்து கிளை ஒடிந்தால் மரத்துக்கு எந்த பாதிப்பம் ஏற்படாது என்பதைப் போல, கட்சியில் இருந்து வெளியேறிவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று ப.சிதம்பரம் என்னிடம் கூறினார்.
கிளையல்ல இலை..
நான் கிளை ஒடிந்ததாக கருதவில்லை. ஒரு இலை உதிர்ந்ததாகவே கருதுகிறேன். எந்த கட்சிக்கும் நிலையான வாக்கு வங்கி கிடையாது.
தொண்டர்களுக்கு வேண்டுகோள்
எனவே, 2016 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் வகையில், கட்சியினர் உழைக்க வேண்டும். இல்லையெனில் நாம் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைய ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.