கச்சத்தீவு விசயத்தில் மறுபரிசீலனை தேவை– ஜி.கே.வாசன் கோரிக்கை
சென்னை: கச்சத்தீவு தொடர்பான விஷயத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அருகில் அமைந்துள்ள படப்பையில் நடைபெற்ற திருமகள் தொழில்நுட்பக்கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் நேற்று அவர் கலந்து கொண்டுஉரையாற்றினார்.
தமிழ்நாட்டில் கல்விக்கு வழிவகுத்தவர் கர்மவீரர் காமராஜர். அவரின் சாதனையால்தான் ஏழை மக்கள் கூட சத்துணவுடன், இலவசக்கல்வியைப் பெற்றனர்.
இதைத்தான் காங்கிரஸ் அரசும் மத்திய அளவில் கட்டாய கல்வித் திட்டமாக மாற்றி அதன்மூலம் இந்தியா முழுவதும் 20 கோடிக்கும் மேலான குழந்தைகளுக்கு இலவச கல்விவழங்கப்பட்டு வருகின்றது.
அவரது மதிய உணவுத்திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியா முழுவதும் உள்ள சுமார் 12 கோடி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 13 ஆயிரத்து 215 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது.

உயர்கல்விக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் பல்லாயிரம் மாணவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி உள்ளது. தற்போது 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வேலை பார்த்து வருவதற்கு இங்கு அவர்கள் பெற்ற கல்விதான் காரணம்.
கச்சத்தீவு விஷயத்தில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற வேண்டும். இதை நான் ஏற்கெனவே பலமுறை வலியுறுத்தி உள்ளேன்.
ரயில் கட்டணத்தை உயர்த்தி, விலைவாசி உயர்வுக்குக் காரணமாகத் திகழும் மத்திய அரசு,விலைவாசி உயர்வைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பா.ஜ.க ஆட்சியில் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளது. அதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications