பாஜக அரசின் ஊழல் பற்றி அதிமுக, திமுக எம்.பி.க்கள் மவுனம் காப்பது ஏன்?... ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி
ஈரோடு : பா.ஜ.க அரசின் ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வரும் நிலையில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் மட்டும் மவுனம் காப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

இடதுசாரி கட்சிகள் மக்கள் பிரச்சினைக்காக கூட்டு இயக்கம் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஜவாஹிருல்லா மற்றும் தமிழருவி மணியன் ஆகியோரை சந்தித்துள்ளோம்.
மக்கள் பிரச்சினையில் கூட்டு இயக்கம் என்பதுதான் எங்களது முயற்சி. இதில், ஊழலை எதிர்ப்பதற்கு யார் எல்லாம் வருகின்றனரோ அவர்களை எல்லாம் கூட்டு இயக்கத்தில் ஏற்று கொள்வோம்.
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர்கள் ஊழலில் சிக்கியுள்ள நிலையில் அவர்கள் ராஜினாமா செய்தபின்பே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி முடக்கி வருகின்றன.
ஆனால், நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க., தி.மு.க. எம்.பிக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர். இவர்கள் ஊழலை எதிர்க்க எப்படி முன் வருவார்கள் என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications