கஜா புயல் நிவாரணம்.. பஹ்ரைனில் இருந்து டெல்டாவிற்கு கரம் கொடுத்த தமிழர்கள்!
கஜா புயலுக்காக பஹ்ரைன் வாழ் தமிழர்கள் மூலம் டெல்டா பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
பஹ்ரைன்: கஜா புயலுக்காக பஹ்ரைன் வாழ் தமிழர்கள் மூலம் டெல்டா பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கடல் கடந்தும் உதவும் நோக்கில் "பஹ்ரைன் வாழ் தமிழர்களுக்காக, தமிழகம் வாழ் உணர்வாளர்களுக்காக" என்ற கொள்கையுடன் பஹ்ரைனில் தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, குருதிக்கொடை, இலவச தமிழ் கல்வி போன்ற பல்வேறு சமுக சேவைகளை செய்துவரும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம், இந்தியன் கிளப் உதவியுடன் "கஜா புயல் நிவாரண பொருள்கள் சேகரிப்பு மையம்" ஏற்படுத்தியது.
நவம்பர் 19ம் முதல் 22ம் தேதி வரை பால் பவுடர், மெழுகுவர்த்தி, எமர்ஜென்சி விளக்குகள், டார்ச் விளக்குகள், உடைகள், போர்வை, துண்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோப்புக்கட்டிகள் அடங்கிய சுமார் 2200 கிலோ அத்தியாவசிய பொருள்கள் சேகரிக்கப்பட்டன.
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க உறுப்பினர்கள், பஹ்ரைன் வாழ் தமிழர்கள், பல்வேறு இந்திய மற்றும் தமிழக அமைப்புகள், பேரு நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை கொடுத்தனர். சேகரிக்கப்பட்ட பொருள்கள் சுமார் 85 அட்டை பெட்டிகளில் முறையாக சீரமைக்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு பின்பு வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கூறும்போது "பஹ்ரைனில் பல்வேறு சமுக சேவைகளை செய்துவருகிறோம், முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு பொருள்கள் சேகரிக்கப்பட்டு பஹ்ரைன் கேரளிய சமாஜம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைத்தோம். தற்போது நமது தாய் தமிழ் உறவுகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்.
டெல்டா பகுதிக்கு நிவாரண பொருள்கள் சென்றடைந்தவுடன் சிறிய வண்டிகள் மூலம் கிராமந்தோறும் வீடு வீடாக நேரில் சென்று விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.