300 கோடி சொத்துக்கள்…. சாராய வியாபாரியை கொன்ற முதல் மனைவியை பழி வாங்கிய 2வது மனைவி
சென்னை: சொத்துக்கு ஆசைப்பட்டு கணவரை கொன்ற முதல் மனைவி வினோதாவை காத்திருந்து வெட்டி சாய்த்துள்ளார் இரண்டாவது மனைவி எழிலரசி.
காரைக்காலில் பிரபல சாராய வியாபாரியாக இருந்தவர் ராமு (எ) ராதாகிருஷ்ணன். இவரது முதல் மனைவி வினோதா (38) ஞாயிறன்று காரில் சென்று கொண்டிருந்தபோது சீர்காழியில் வழிமறித்து, கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சாராய வியாபாரி ராமு சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளைக் கையகப்படுத்துவதில் ராமுவின் முதல் மனைவி வினோதாவிற்கும், இரண்டாவது மனைவி எழிலரசிக்கும் இருவருக்கிடையே ஏற்பட்ட போட்டிதான் இந்த கொலைக்கு காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவரவே, எழிலரசிதான் கூலிப்படை வைத்து வினோதாவைப் படுகொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான சொத்துக்கள்
சாராய வியாபாரி ராமுவிற்கு காரைக்கால் மற்றும் தமிழகத்தில் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு சொத்துகள் உள்ளன. முதல் மனைவி வினோதா இருக்கும் போதே எழிலரசியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ராமு, ஒரு கட்டத்தில் சுமார் ரூ.100 கோடிக்கும் மேலான சொத்துகளை எழிலரசிக்கு அளித்தார்.
கணவரை கொல்ல சதி
ராமுவை எழிலரசி பிடியிலிருந்து மீட்க முயன்று தோற்றார் வினோதா. இனியும் பொறுத்தால் மற்ற சொத்துகளும் எழிலரசிக்குப் போய்விடும் என்று நினைத்தார். கூலிப்படையினரை ஏவி தன் கணவர் ராமுவை கொலை செய்ய திட்டமிட்டார் வினோதா.
வெட்டிக்கொலை
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழிலரசியோடு சென்று கொண்டிருந்தபோது ராமுவை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து கொலை செய்தனர். அதில் எழிலரசிக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
பழிக்கு பழி வாங்கிய எழிலரசி
அந்த வழக்கில் வினோதா மற்றும் அவருக்கு உதவிய ஐயப்பன், கோவிந்தராசு, ஆனந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தனர்"என்று கூறும் போலீஸார், கணவரை தன் கண்முன்னே கொன்றவர்களை பழிதீர்க்க முடிவு செய்து எழிலரசிதான் தற்போது முதல் மனைவி வினோதாவை கொலை செய்திருப்பதாக வழக்குப் பதிவு செய்து எழிலரசியையும் இன்னும் சிலரையும் கைது செய்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே
எழிலரசியின் கொலை திட்டங்கள் தற்போது தீட்டப்பட்டதல்ல. 2013 ஜனவரியில் ராமு கொலை செய்யப்பட்டதுமே அதற்கு காரண மானவர்களை பழிவாங்க எழிலரசி முடிவு செய்திருப்பார் என்று காரைக்கால் போலீஸார் தெரிவிக்கின்றனர். ராமு கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ஐயப்பனை அதே ஆண்டு ஜூலை மாதம் ஒரு கும்பல் கொலை செய்தது. மற்றொருவரான கோவிந்தராசுவை கொலை செய்ய அவரது வீட்டுக்கு அருகே சென்ற கூலிப்படையினரை போலீஸார் ரோந்து வந்தபோது கண்டுபிடித்து கைது செய்தனர்.
வெளிநாட்டு தப்ப முயன்ற வினோதா
தனக்கு அச்சுறுத்தல் இருப்பதை நன்கு உணர்ந்துதான் சிங்கப்பூர் செல்ல முடிவெடுத்திருந்தார் வினோதா. கொலையான அன்று இரவு சிங்கப்பூர் செல்வதற்காக காரைக்காலிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு அவரைத் தப்பவிடக் கூடாது என்றுதான் அவசரமாக முடிவெடுத்து வழியிலேயே காரை மடக்கி அவரைக் கொலை செய்துள்ளனர் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கணவன் ராமுவை கொன்றவர்களை முழுவதுமாக ஒழித்துக் கட்ட முடிவெடுத்துத்தான் அடுத்ததாக தற்போது வினோதாவை கொலை செய்திருக்கிறார் எழிலரசி என்று போலீஸார் கூறுகின்றனர்.
11 பேர் கொண்ட கும்பல்
வினோதாவைக் கொலை செய்ய 2 கார்களில் வந்தவர்கள் மொத்தம் 11 பேர். அதில் எழிலரசி உட்பட 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் மற்ற 7 பேர் கொள்ளிடம் ரயில் நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு, அந்த சமயத்தில் ரயில் இல்லாததால் இருப்புப்பாதை வழியாகவே சிதம்பரம் நோக்கி ஓடிச் சென்றதாக போலீஸாரின் விசாரணையின் போது ரயில் நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கூலிப்படைத்தலைவன் யார்
இந்த கூலிப்படைக்குத் தலைவனாக இருந்தது யார் என்பதையும் கண்டறிந்தால் மட்டுமே இந்த கொல்லையில் பல மர்மமுடிச்சுகள் அவிழும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications