பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் குடியிருப்பில் கஞ்சா! கைதான 11 பேர் சொந்த ஜாமினில் விடுவிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து நேற்று காலையிலேயே போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்ட 11 மாணவர்களை நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்துள்ளது.
சென்னை பொத்தேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநில மாணவர்கள் என லட்சக்கணக்கானோர் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியின் விடுதி மற்றும் கல்லூரியை சுற்றியுள்ள விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, 500 -க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று அதிகாலை 3 மணிக்கே அங்கு குவிந்தனர். 3 துணை கமிஷனர்கள், 2 கூடுதல் துணை கமிஷனர்கள், 19 உதவி கமிஷனர்கள், 50 இன்ஸ்பெக்டர்கள் என ஒட்டு மொத்தமாக களம் இறங்கிய போலீசார், மாணவர் தங்கியிருந்த வீடுகளை குறிவைத்து சோதனை மேற்கொண்டனர். மாணவர்கள் பயன்படுத்திய சூட்கேஸ் மற்றும் பைகள் உள்ளிட்ட உடமைகளை போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் குவியல் குவியலாக பிடிபட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தனி பைகளில் போட்டு எடுத்துச் சென்றனர். கஞ்சா, 6 கஞ்சா சாக்லெட்டுகள், 20 மி.லி. கஞ்சா ஆயில், ஹோக்கா போதை பவுடர், அதனை பயன்படுத்தும் 7 எந்திரங்கள், போதைப் பொருட்களை பயன்படுத்தி புகைப்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய குழாய் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மாணவர்களுக்கு போதைப்பொருள் கிடைத்தது எப்படி என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கைதான 1 மாணவி உள்பட 11 கல்லூரி மாணவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மாணவர்களை நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுதலை செய்தது. மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த 3 பேரை 15 நாட்கள் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications