அன்று ராமாவரம்.. இன்று போயஸ் கார்டன்.. அலற வைக்கும் அரசியல் "தோட்டங்கள்"!
சென்னை: தமிழக அரசியலில் இந்த "கார்டன்"களுக்கு எப்போதுமே ஒரு தனி பரபரப்பு உண்டு. அன்று ராமாவரம் கார்டன் அப்படி ஒரு பரபரப்பான கார்டனாக திகழ்ந்தது. இன்று போயஸ் கார்டன் அந்த இடத்தைப் பிடித்திருப்பதாக தெரிகிறது.
இன்று கண்டு கொள்ளப்படாமல் கிடக்கும் அந்த ராமாவரம் கார்டனில்தான் மறைந்த எம்.ஜி.ஆரின் அரசாட்சி நடைபெற்றது. அங்கிருந்தபடி அவர் செய்த அரசியல், இன்றுள்ள மக்களால் மறக்கப்பட்டிருந்தாலும் கூட அன்றைய அரசியலை நன்கு அறிந்த யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.
அதிமுக தொடர்பானது மட்டுமல்லாமல் திமுக தொடர்பான, திராவிட இயக்கம் தொடர்பான பல முக்கிய சம்பவங்களைப் பார்த்த மெளன சாட்சி ராமாவரம் கார்டன்.

எம்.ஜி.ஆரின் அரண்மனை
ராமாவரம் தோட்டம் என்றாலே அதிமுகவினர் மத்தியில் ஒரு பரவசம் ஏற்படும். அது எம்.ஜி.ஆரின் வீடு மட்டுமல்ல, அவரது அரண்மனை. அங்குதான் அவரது ஆட்சி அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது பல காலம்.

கார்டனுக்கு கூப்பிடுறாங்க!
கார்டனுக்கு தலைவர் கூப்பிட்டனுப்பியிருக்கார் என்று யாராவது ஒரு தலைவருக்கு அப்போது தகவல் வந்தால் ஆடிப் போய் விடுவார்களாம். ஆஹா.. என்ன நடக்கப் போகுதோ என்பதுதான் முதலில் அவர்களது கேள்வியாக இருக்குமாம்.

அன்பும்.. "அணைப்பும்"
ராமாவரம் தோட்டத்தில் வைத்துத்தான் எம்.ஜி.ஆர். கட்சி தொடர்பான பிரச்சினைகள், விவகாரங்களைப் பார்ப்பது வழக்கம். கட்சியில் யாராவது தவறு செய்தால் உடனே கார்டனுக்கு வருமாறு அழைப்பு வரும். அங்கு அவர்களது செயல்பாடுகளுக்கேற்ற கவனிப்பு கிடைக்கும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள். சிலருக்கு அன்பு கிடைக்கும்.. சேட்டை செய்தால் "அணைப்பு"ம் கிடைக்குமாம்.

என்ன செய்வார் எம்.ஜி.ஆர்.?
ராமாவரம் கார்டனுக்கு அழைப்பு வந்தால் அங்கு போவோருக்கு வயிறு நிறைய சாப்பாடு கிடைக்கும் என்பார்கள். யாரையும் சாப்பிட வைக்காமல் பேசவே மாட்டாராம் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு அன்னத்தின் மீது அவர் மதிப்பு வைத்திருந்தார்.

விசாரணைகள்.. தீர்வுகள்
சாப்பிட்டு முடித்த பிறகுதான் பேச்சே ஆரம்பிக்குமாம். கட்சி விவகாரம் தொடர்பாகவம், கட்சியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விலாவாரியாக விவாதிப்பாராம் எம்.ஜி.ஆர். புகாருக்குள்ளானவரை தனியாக கூப்பிட்டு விசாரிப்பாராம். அவர் மீது நியாயம் இருந்தால் தப்பித்தார்.. இல்லையேல்.. கவனிப்புதான் என்று கூறுகிறார்கள் அப்போதைய அரசியல் அறிந்த முன்னோடிகள்.

எம்.ஜி.ஆர். பாணியில்
தற்போது எம்.ஜி.ஆர் பாணியில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் கட்சி அரசியலும் உள்ளது. கட்சியில் யார் மீதாவது புகார் வந்தால் உடனே கார்டனிலிருந்து அழைப்பு போகிறது. அங்கு வைத்து விசாரணை நடத்துகிறார் ஜெயலலிதா. விசாரணையின்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

சசிகலா புஷ்பா பேச்சால் புது பரபரப்பு
இந்த நிலையில்தான் முதல்வர் தன்னை அறைந்து விட்டார் என்று சசிகலா புஷ்பா பகிரங்கமாக கூறி புதிய பரபரப்பையும் பல சந்தேகங்களையும் எழுப்பி விட்டார். அப்படியானால் இதுபோன்ற விசாரணைகளின்போது அடியும் விழுமோ என்று எண்ணும் அளவுக்கு அவரது பேச்சு அமைந்துள்ளது.
"கார்டன்" அரசியல் குறித்த புதிய வெளிச்சத்தையும் சசிகலா புஷ்பாவின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.!












Click it and Unblock the Notifications